‘வேற கம்பெனில இண்டர்வியூ..’ மேலதிகாரியிடம் நேர்மையாக லீவு கேட்ட ஊழியர்.. குவியும் பாராட்டு!
வேறொரு நிறுவனத்தின் நேர்காணலுக்கு செல்வதற்காக விடுமுறை கேட்ட ஊழியரின் விடுமுறை விண்ணப்பக் கடிதம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
டெல்லி: தனது மேலதிகாரியிடம் ஊழியர் ஒருவர் வித்தியாசமாக விடுமுறை கேட்ட விண்ணப்பக் கடிதம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நமது பள்ளிப் பருவத்தில் நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்களில் காலத்தால் மறக்க முடியாதது காய்ச்சல் விடுமுறைக் கடிதம்தான். 'சார் ஐயம் சபரிங் பிரம் பீவர்..' என்ற அந்த விடுமுறை விண்ணப்பக் கடிதத்தை பாதித் தூக்கத்தில் தட்டி எழுப்பிக் கேட்டால்கூட, கடகடவென சொல்ல முடியும். காரணம் அந்தளவிற்கு அதைப் பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்தில் பயன்படுத்தியது தான்.
சிலர் ஆள் வளர்ந்தாலும்கூட, இந்த கடிதத்தை விட மாட்டார்கள். என்ன காரணத்திற்காக விடுப்பு எடுத்தாலும்கூட, அலுவலகத்திலும் இதே கடிதத்தை சமர்ப்பிப்பவர்கள் இப்பவும் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் இருந்து மாறுபட்டு, தான் மற்றொரு நிறுவனத்தின் நேர்காணலுக்குச் செல்கிறேன் என உண்மையான காரணத்தைக் கூறி, ஊழியர் ஒருவர் தனது மேலதிகாரிக்கு விடுப்பு விண்ணப்பம் அனுப்பி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

இதுதான் காரணம்
சம்பந்தப்பட்ட அந்த விடுமுறை விண்ணப்பத்தில், "நான் வேறொரு நிறுவனத்தின் நேர்காணலுக்கு செல்ல இருக்கிறேன். அதனால் இன்று எனக்கு விடுமுறை தேவைப்படுகிறது. எனது விடுமுறையை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என அந்த ஊழியர் கூறியுள்ளார்

சாமர்த்தியசாலிகள்
இந்த விடுப்பு விண்ணப்பக் கடிதத்தை சாகில் என்ற மேலதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "எனக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள். வேறொரு நிறுவனத்துக்கு நேர்காணல் செல்வதாக உண்மையான காரணத்தை கூறி விடுமுறை கேட்டிருக்கிறார்கள்" எனப் பதிவு செய்துள்ளார்.

கெத்துதான்
இந்த வித்தியாசமான விடுமுறை விண்ணப்பத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 'ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..' என நாடோடி பட சசிகுமார் மாதிரி, விடுப்பு கேட்டவரின் நேர்மையை அவர்கள் பாராட்டி வருகின்றனர். கூடவே இப்படியெல்லாம் உண்மையைச் சொல்லி விடுமுறைக் கேட்க தைரியம் வேண்டும் என கமெண்ட்டில் தெரிவித்துள்ளனர்.

மிரட்டுறாங்க பாஸ்
வழக்கம்போலவே, எல்லாவற்றையும் மற்றொரு கோணத்தில் இருந்து பார்க்கும் தரப்போ, 'ஒருவேளை உங்களது ஊழியர் தனக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறாரோ என்னவோ.. ஊதிய உயர்வு தராவிட்டால் நான் வேறொரு நிறுவனத்திற்குச் சென்று விடுவேன் என உங்களை மறைமுகமாக மிரட்டுகிறார் பாஸ்..' என ஜாலியாகப் பதிவிட்டுள்ளனர்.

இது சாம்பிள்தான்
எது எப்படியோ இந்த ஒரு கடிதம் மூலம் சம்பந்தப்பட்ட அந்த ஊழியரும், அவரது மேலதிகாரியும் டிவிட்டரில் பிரபலமாகி விட்டனர். இதே போல், சுருக்கமாக அதே சமயத்தில் இனிமையாக ( அதான் Short and sweet பாஸ்...) உள்ள விடுமுறை விண்ணப்பம் மற்றும் ராஜினாமா கடிதங்களையும் இந்தப் பதிவின் கீழ் நெட்டிசன்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications