மிரட்டிய ஈரான்.. கடலில் தவிக்கும் 36 இந்திய கப்பல்கள்.. மத்திய அரசுக்கு பெரும் தலைவலி
டெல்லி: மத்திய கிழக்கில் நடக்கும் போரால் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் நம் நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியா கொடியுடன் கூடிய 36 கப்பல்கள் சிக்கி தவித்து வருவதும், அதனை மீட்பதில் பெரிய சவால்களை இந்தியா சந்தித்து வருவதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளது. இதனால், ஈரான், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்பட பிற அரபு நாடுகளை தாக்கி வருகிறது. இதனால் போர் உக்கிரமடைந்துள்ளது.

மேலும் இந்த அரபு நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகம், கியாஸ் வர்த்தகத்தை முடக்கும் வகையில் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இந்த இடம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தினமும் உலகளவில் ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், கியாஸில் 20 சதவீதம் இந்த பாதை வழியாக தான் பிற நாடுகளுக்கு செல்லும்.
கியாஸ் தட்டுப்பாடு
குறிப்பாக சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும். இப்போது ஷார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இது நம் நாட்டில் கியாஸ் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
36 கப்பல்கள் சிக்கி தவிப்பு
இதனால் வணிக சிலிண்டர்கள் விநியோகம் பல நகரங்களில் தடைப்பட்டுள்ளது. வீட்டு சிலிண்டரை புக் செய்வதற்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் தான் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியில் நம் நாட்டுக்கான கப்பல்கள் சிக்கி தவித்து வருவது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் நம் நாட்டின் தேசியக்கொடியுடன் கூடிய 36 கப்பல்கள் சிக்கி தவிக்கின்றனர். ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி வைத்துள்ளதால் இந்த கப்பல்கள் அந்த இடத்தை கடக்க முடியாமல் கடலில் நங்கூரமிட்டுள்ளன. இந்த கப்பல்களில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளதால் உரிய நேரத்தில் அது மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பாக இருக்கிறதா?
மேலும் இந்தியா கொடியுடன் கூடிய 36 கப்பல்களும் கடலில் தவித்தாலும் கூட தற்போது வரை பாதுகாப்பாக உள்ளது. கப்பலுக்கும், அதில் உள்ள ஊழியர்களுக்கும் எந்த பிரச்சனையையும் இல்லை. இதற்கிடையே தான் இந்திய கப்பல்கள் மற்றும் அதில் உள்ள மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.
முதல் மேட்டர்
4 விஷயங்களை இந்தியா பரிசீலனை செய்து வருகிறது. முதலில் இந்தியா கொடியுடன் நிற்கும் கப்பல்களை நம் நாட்டின் கடற்படை கப்பல்களின் பாதுகாப்புடன் அப்பகுதியில் இருந்து பத்திரமாக வெளியேற்றம் செய்வது பற்றி பரிசீலித்து வருகிறது. இதுபற்றி கப்பல் இயக்குநரக துணை இயக்குனர் ஜெனரல் (மாலுமிகள்) பி.சி. மீனா கூறுகையில், ''இந்தியா கொடியுடன் கூடிய கப்பல்களை போர் பதற்றம் நிறைந்த பகுதியில் இருந்து பத்திரமாக வெளியேற்ற தேவையன நடவடிக்கைகள் பற்றி உயர்மட்ட அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை'' என்றார்.
2வது மேட்டர்
இரண்டாவதாக இந்திய கப்பல்கள் உள்ள பகுதிகளில் நிலைமையை உன்னிப்பாக கவனிப்பது. இதற்காக நெருக்கடி மேலாண்மைக் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழு 3 மணிநேரத்துக்கு ஒருமுறை அறிக்கையை சமர்ப்பித்த வருகிறது. அதன்படி தற்போது வரை இந்தியக் கப்பல்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3வது மேட்டர்
மூன்றாவதாக, அதிக ஆபத்துள்ள கடற்பகுதிகளில் செயல்படும் கப்பல்களுக்கான கட்டாயப் பாதுகாப்பு நடைமுறைகளை இந்தியா அமல்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மட்டுமின்றி ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா போன்ற கடல் பகுதிகளிலும் கட்டாய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கடல் கொள்ளையை தடுப்பது, அத்துமீறிய உள்நுழைவதை தடுப்பது, குண்டுவீச்சில் பாதுகாப்பாவது இருப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்க உத்தவிடப்பட்டுள்ளது.
4வது மேட்டர்
4வது விஷயம் என்னவென்றால் இந்தியக் கப்பல்களின் கேப்டன்கள், இந்திய பெருங்கடல் பிராந்திய தகவல் இணைப்பு மையத்திற்கு (IFC-IOR) தினமும் ஆன்லைனில் முழு விவரங்களை அறிக்கைகளாக சமர்ப்பிக்க வேண்டும். அதோடு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், இந்திய வர்த்தகக் கப்பல்கள் உடனடியாக அருகே உள்ள இந்திய கடற்படை கப்பல் அல்லது கூட்டு படை கப்பலை (Coalition Warships) VHF சேனல் 16 மூலம் மூலம் தொடர்பு கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications