உக்ரைன் போரை நிறுத்தியதாக சொல்கிறார்கள்.. நீட் வினாத்தாள் கசிவை மோடியால் நிறுத்த முடியலயா? ராகுல்
டெல்லி: உக்ரைன், இஸ்ரேல் போரை மோடி நிறுத்தியதாக கூறுகிறார்கள். ஆனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை நிறுத்த முடியவில்லை என்றும் நீட் மிகப்பெரிய ஊழல் எனவும் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார்.
வினத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என இதுவரை இல்லாத அளவுக்கு நீட் தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:- ரஷ்யா உக்ரைன் போரை மோடி நிறுத்தினார் என்று சொல்கிறார்கள். ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக நீட் வினாத்தாள் கசிவை நிறுத்த முடியவில்லை. அல்லது நிறுத்த விரும்பவில்லை. பாஜகவின் தாய் அமைப்புகளால் கல்வி நிலையங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதனால்தான், இது போன்ற வினாத்தாள் கசிவு நடைபெறுகிறது. இது மாற்றப்படாத வரை வினாத்தாள் கசிவு நடந்து கொண்டேதான் இருக்கும். கல்வி நிலையங்களை பாஜக அமைப்புகள் கைப்பற்ற மோடி உதவி செய்கிறார். இது ஒரு தேசத்துரோக செயல்பாடு ஆகும். பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது இல்லை.
குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் உள்ள தொடர்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பொருளாதாரத்தில் மோடி என்ன செய்தாரோ அதை தற்போது கல்வி அமைப்பில் செய்யப்படுகிறது. வினாத்தாள் கசிவு மூலம் இந்தியாவின் கல்வி அமைப்புகள் மீத தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வினாத்தாள் கசிவு பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. வியாபம் ஊழலை விட நீட் மிகப்பெரிய ஊழல். பிரதமர் மோடி மனதளவில் உடைந்து போயுள்ளார். வினத்தாள் கசிவை நிறுத்த அரசு ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications