ஒரே ஒரு அமைச்சர் பதவி தானா? அமித்ஷா ஆஃபரை நிராகரித்த நிதிஷ் 'கடுகடு'
Recommended Video
டெல்லி: மோடி அமைச்சரவையில் தங்களுக்கு ஒரே ஒரு இடம்தான் ஒதுக்க முடியும் என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியதை ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் நிராகரித்துவிட்டார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கிறது. லோக்சபா தேர்தலிலும் இந்த கூட்டணி நீடித்து. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39-ஐ பாஜக கூட்டணி கைப்பற்றியது.
பாஜக 17, ஐக்கிய ஜனதா தளம் 16, லோக் ஜன சக்தி 6 இடங்களைக் கைப்பற்றின. இதனைத் தொடர்ந்து லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்டார்.
மோடி அமைச்சரவையில் இடமில்லை... இனி என்ன செய்யும் அதிமுக.. அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?
ஐ.ஜனதா தளம் டிமாண்ட்
ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது 16 இடங்களில் வென்றதால் தங்களுக்கு 2 அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டிருந்தது. இது தொடர்பாக அமித்ஷாவை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்.
அதிருப்தியில் நிதிஷ்
ஆனால் ஒரே ஒரு அமைச்சர் பதவி தான் தர முடியும் என அமித்ஷா திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த நிதிஷ்குமார் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சரவையில் பங்கேற்கவில்லை
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மோடி பதவி ஏற்பு விழாவில் நிதிஷ்குமார் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தளத்தினர் பங்கேற்றனர். இது தொடர்பாக நிதிஷ்குமார் கூறியதாவது:
கேட்டது 2 பதவி
6 இடங்களை வென்ற ராம்விலாஸ் பஸ்வானின் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 16 இடங்களில் வென்ற எங்களுக்கு 2 அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைத்தோம்.
அமித்ஷாவுக்கு மறுப்பு
ஆனால் பாஜகவோ, அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது ஒரு சம்பிரதாயம்தான் என விளக்கம் அளித்தது. நாங்கள் சம்பிராதயமாக அமைச்சரவையில் இடம்பெறவும் விரும்பவில்லை. அதனால் ஒரு அமைச்சர் பதவி என்பதை நிராகரித்திருக்கிறோம். அதே நேரத்தில் பீகாரில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.
அதிருப்தியின் தொடக்கம்?
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடங்கி அமைச்சரவை வரை எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் வெற்றிகரமாகவே பாஜக காய்களை நகர்த்தி வந்தது. முதல் முறையாக கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி குரலை வெளிப்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் உறுதி என கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. இந்த அதிருப்திகள் விஸ்வரூபம் எடுக்குமா? புஷ்வானம் ஆகுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.