திடீரென பறந்த ஜெட் விமானங்கள்.. இரவை கிழித்த சத்தம்! என்ன நடக்கிறது ஜம்மு காஷ்மீரில்?
ஸ்ரீநகர்: திங்கட்கிழமை இரவு திடீரென இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் காஷ்மீர் வானில் பார்க்க முடிந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை (ஆக.5ம் தேதி) மிக முக்கியமான அறிவிப்பு வெளிவர இருப்பதாகவும், எனவேதான் விமானங்கள் குவிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது. 6 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் மாநில அந்தஸ்து திருப்பி கொடுக்கப்படவில்லை. இதற்கிடையில் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில், திங்கட்கிழமை இரவு திடீரென வானில் போர் விமானங்கள் பறந்திருக்கின்றன.

வழக்கமாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பயிற்சி மேற்கொள்வதை விமானிகள் தவிர்ப்பார்கள். ஏனெனில் இங்குள்ள மலைகளின் உயரம் அதிகம். இப்படி இருக்கையில் திடீரென போர் விமானங்கள் பறந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த தங்கள் கருத்துகளை மக்கள் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்திருக்கின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஓமர் அப்துல்லா நாளை எந்த ஸ்பெஷல் நிகழ்வும் கிடையாது என்று எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது குறித்து அவர் தனது சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருப்பதாவது,
"ஜம்மு-காஷ்மீரில் நாளை என்ன நடக்கும் என்பது குறித்து சாத்தியமான அனைத்து யூகங்களையும் நான் கேட்டுவிட்டேன், அதனால் நான் தைரியமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், நாளை எதுவும் நடக்காது. நல்லவேளையாக, எந்தவொரு கெட்ட விஷயமும் நடக்காது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எந்தவொரு நல்ல விஷயமும் நடக்காது. நாடாளுமன்றத்தின் இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் ஜம்மு-காஷ்மீருக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஆனால் நாளை அல்ல.
நான் டெல்லியில் உள்ள யாரையும் சந்திக்கவோ, பேசவோ இல்லை. இது என் உள்ளுணர்வு மட்டுமே. நாளை இந்த நேரத்தில் பார்ப்போம்" என பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications