பஞ்சாபில் பரபரப்பு! கபடி போட்டியில் துப்பாக்கிச் சூடு! நட்சத்திர வீரர் சம்பவ இடத்திலேயே பலி
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் சர்வதேச கபடி வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் கபடிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் திடீரென ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சர்வதேச கபடி வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மைதானத்தில் துப்பாக்கிச் சூடு
பஞ்சாபின் ஜலந்தர் அடுத்துள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் நேற்று திங்கள்கிழமை கபடிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த போட்டியைக் காண மைதானத்தில் பலரும் ஆர்வமாகக் குவிந்திருந்தனர். இந்தப் போட்டியில் சர்வதேச போட்டிகளில் நடைபெற்ற பங்கேற்ற நட்சத்திர வீரர்களில் ஒருவரான சந்தீப் சிங் நங்கல் அம்பியன் கலந்து கொண்டு இருந்தார். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்குப் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சந்தீப் சிங்கை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

கபடி வீரர் பலி
இதில் படுகாயமடைந்த சந்தீப் சிங் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். நகோடரில் உள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் போட்டி மைதானத்தில் இருந்து சந்தீப் வெளியே வந்தபோது, நான்கு பேர் கும்பல் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். சந்தீப் சிங் மீது தலை மற்றும் மார்பு பகுதியில் மீது 8 முதல் 10 தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

யார் இவர்
10 ஆண்டுகளுக்கு மேலாக சந்தீப் சிங் கபடி விளையாட்டில் நட்சத்திர வீரராக திகழந்து வருகிறது. பஞ்சாப் மட்டுமின்றி கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலும் அவர் கபடி விளையாடி உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜலந்தர் துணைக் கண்காணிப்பாளர் (நாகோதர்) லக்விந்தர் சிங், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், சந்தீப் சிங் நங்கல் அம்பியன் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றாலும் இங்கிலாந்தில் வசித்து வந்தவர் என்றும் குறிப்பிட்டார்.

வீடியோ
இந்தச் சம்பவத்தின் தொடர்பான வீடியோவும் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. அதில் மக்கள் போட்டியை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு இருந்த போது, திடீரென அங்கு வரும் சிலர் சந்தீப் சிங்கை நோக்கி சரமாரியாகச் சூடுவது பதிவாகி உள்ளது. மைதானத்தில் நடந்த இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டைக் கண்டு, அங்குக் கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து, சிதறி ஓடுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications