ஆஹா இது லிஸ்ட்லேயே இல்லையே.. காஷ்மீரை போல் அப்படியே எங்களுக்கும்.. ரவீந்திரநாத் 'தூள்' கோரிக்கை
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தது போல், கச்சத்தீவை மீட்டு தமிழகத்திடம் கொடுக்க வேண்டும் என ரவீந்திரநாத் எம்பி லோக்சபாவில் பேசினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் பிரிவு 370 மற்றும 35ஏ ஆகியவற்றை நீக்கியுள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இன்று லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீது இன்று காலை முதல் விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் காங்கிரஸ், பாஜக, திமுக உள்பட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசினார். திமுக எம்பிக்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். ஆனால் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
அதிமுக எம்பி ரவீந்திரநாத் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா குறித்து பேசுகையில், "ஜம்மு-காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைக்க வேண்டும் என்று 1984 ஆண்டிலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ராஜ்யசபாவில் பேசியுள்ளார். அவரது கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. இனிமேல், காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும். இது வரலாற்றில் மிகப்பெரிய மைக்கல். காங்கிரஸ் அரசு 1974 ஆம் ஆண்டு அரசியல் லாபத்திற்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது. தற்போது, உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு கச்சத்தீவை எங்களிடம்(தமிழகத்திடம்) மீட்டுத் தர வேண்டும் என மத்திய அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.
ஒரு பக்கம் ஜம்மு காஷ்மீருக்காக பிரதமர் மோடியை பாராட்டிய ரவீந்திராநாத், இதுவரை அரசின் லிஸ்டிலேயே இல்லாத ஒரு கோரிக்கையை அதாவது கச்சத்தீவை மீட்பது குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.