என்னை அறைந்த பெண் காவலரை பாராட்டுறீங்களே! அப்போ பலாத்காரம் செய்தாலும் ஓகேவா? நடிகை கங்கனா கேள்வி
டெல்லி: ஒருவரின் உடலை அனுமதியின்றி தொட்டு தாக்குதல் நடத்தியது சரி என நீங்கள் நினைத்தால் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்வதற்கும் ஆதரவு அளிக்கிறீர்கள் என்று நினைவில் கொள்ளுங்கள் என நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக பேசியுள்ளார்.
கங்கனாவை சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் அறைந்த சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவோருக்கு அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.

சண்டீகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்ற போதுதான் குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கங்கனா ரனாவத்தை தாக்கினார். டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நடத்திய போராட்டத்தில் பஞ்சாப் பெண்களும் பணத்திற்காகவே கலந்து கொண்டனர் என தரம் தாழ்ந்து பேசியதற்காக அந்த காவலர், கங்கனாவை அடித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கங்கனா வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். என்னை சண்டீகர் விமான நிலையத்தில் பெண் அதிகாரி தாக்கியதை அறிந்த என்னுடைய நலம் விரும்பிகள், மீடியாக்களிடம் இருந்து நான் எப்படி இருக்கிறேன் என கேட்டு எனக்கு செல்போன் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
நான் நலமாக இருக்கிறேன். சண்டீகர் விமானத்தில் கடந்த ஜூன் 6ஆம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் என்னை சோதனை செய்தனர். அப்போது அதை முடித்துக் கொண்டு நான் அங்கிருந்து நகர்ந்தேன். அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் என்னை அறைந்தார். என்னை அவதூறாக பேசினார். என்னை ஏன் அடித்தீர்கள் என நான் கேட்டதற்கு, அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் செயல்படவில்லை என்பதால் அறைந்ததாக தெரிவித்திருந்தார்.
எப்படியோ நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். ஆனால் எனது கவலை என்னவென்றால் பஞ்சாபில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் தீவிரவாதத்தையும் வன்முறையையும் எப்படி கையாள்வது என்பதுதான் என கங்கனா அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
அந்த பெண் காவலர் கைது செய்யப்பட்டார். அவருக்கு பலர் ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகிறார்கள். அதே வேளையில் சிலர் கங்கனாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் காவலர் தன்னை தாக்கியதை சரி என கூறி வருவது குறித்து கங்கனா கூறுகையில் ஒருவரின் அந்தரங்க பகுதிக்குள் நுழைந்து அவர்களின் அனுமதியின்றி அவர்களின் உடலை தொடுதல் மற்றும் தாக்குதல் சரி என நீங்கள் நினைத்தால் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்வதையும் சரி என்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் அது அவர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் கங்கனா ரனாவத். இவர் 5,37,022 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் 4,62,267 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். இருவருக்குமான வித்தியாசம் 74,755 ஆகும். கங்கனா இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர்.
பாலிவுட்டில் வாரிசுகளின் பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து பேசியுள்ளார். கரண் ஜோஹர் உள்பட பலரை அவர் வெளிப்படையாகவே தாக்கி பேசியுள்ளார். அது போல் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும் கங்கனா கொச்சைப்படுத்தி பேசியிருந்தார். அது போல் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா, "காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசை தங்களுக்கு ஏற்றப்படி வளைக்கலாம். ஆனால் நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் (இந்திரா) அவர்களைத் தனது ஷூவில் போட்டு நசுக்கினார்.
அவர் ( இந்திரா) இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் கொசுக்களைப் போல் தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை (காலிஸ்தானி பயங்கரவாதிகளை) நசுக்கினார். அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது (இந்திரா) பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள். அவரை போன்ற ஒரு நபர் தான் இப்போது தேவை" எனப் பதிவிட்டுள்ளார்.
அது போல் சீக்கியர்களை காலிஸ்தானியர்கள் என்றும் 1984 ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்தும் அவர் கூறிய கருத்துகள் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனை சர்ச்சைக்களுக்கும் நாயகியான கங்கனாவுக்கு பாஜக சீட் தராது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் அவருக்கு மண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. அவரும் எம்பியாகிவிட்டார்.












Click it and Unblock the Notifications