மணிப்பூர் பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: கனிமொழி எம்பி
டெல்லி: மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு மீது வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என திமுக பொதுச்செயலாளரும் லோக்சபா எம்பியுமான கனிமொழி தெரிவித்தார்.
கனிமொழி உட்பட "இந்தியா" கூட்டணியின் எம்பிக்கள் கடந்த 2 நாட்களாக மணிப்பூர் மாநிலத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். 3 மாதங்களாக வன்முறைகள் தொடரும் மணிப்பூர் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை "இந்தியா கூட்டணி" எம்பிக்கள் நேரில் சந்தித்தனர். இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவையும் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் சந்தித்தனர்.

பின்னர் டெல்லி திரும்பிய "இந்தியா கூட்டணி" எம்பிக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது கனிமொழி எம்.பி. கூறுகையில், மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்; மணிப்பூர் மாநிலத்தில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் தாயாருக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டது என்பது பொய். முகாம்களை விட்டு சொந்த வீடுகளுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எதனையுமே செய்யவில்லை. மணிப்பூரில் அனைத்து தரப்பு மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
திருமாவளவன் எம்பி: மணிப்பூரில் மைத்தேயி இனமக்களை சந்தித்தோம். மியான்மர் நாட்டில் இருந்து குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்பது மைத்தேயி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக தேவைப்பட்டால் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.
ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா: மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்பது எங்களது விருப்பம். மணிப்பூரில் அனைத்து இனமக்களும் இணக்கமாக வாழ வேண்டும் என விரும்புகிறோம். மணிப்பூரில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. மணிப்பூருக்கு அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம்.

காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய்: மணிப்பூர் மக்கள் எங்களை வரவேற்றனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் மற்றும் பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்துக்கு சென்று பார்வையிட வேண்டும்.
இன்று I.N.D.I.A. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் மணிப்பூர் ஆளுநர் திருமிகு. @AnusuiyaUikey அவர்களைச் சந்தித்து, மணிப்பூர் பிரச்சனை தொடர்பாகக் கோரிக்கை கடிதம் அளித்தோம். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குச் செல்லவும்,… pic.twitter.com/CSdsrhLlyn
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 30, 2023
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ்: நாங்கள் அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் மத்திய அரசு எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. ஆகையால் "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்று ஆய்வு செய்தோம். நாங்கள் மணிப்பூரில் என்ன ஆய்வு செய்தோம் என்பதை தெரிவிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் பிரதமர் மோடிதான், நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை.












Click it and Unblock the Notifications