கரூர் நெரிசல் வழக்கு.. தவெக கோரிக்கை ஏற்கப்படுமா? நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று காரசார வாதம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பும், விஜய் தரப்பும் சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தன. தவெக தரப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை வரும் திங்கள் கிழமை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கிறது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதோடு சென்னை ஐகோர்ட் விஜய் பற்றி மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது.

karur-stampede-case-will-tvk-s-plea-be-accepted-supreme-court-to-deliver-verdict-oct-13

திங்கட்கிழமை தீர்ப்பு

இதையடுத்து, இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ஜே. கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது தவெக சார்பில் மூத்த வக்கீல்கள் கோபால் சுப்பிரமணியம், ஆரியமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் சிங்க்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இரு தரப்புக்கும் இடையே கடும் வாதம் நடைபெற்றது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது.

கரூர் வழக்கில் நடைபெற்ற காரசார வாதங்கள்

முன்னதாக நேற்று கரூர் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. கூட்ட நெரிசலில் பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பி.பன்னீர்செல்வம் சார்பில் வக்கீல் அமன் மாலிக் சிபிஐ விசாரணை கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோப்புகளை சிபிஐயிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, உடனடியாக சிபிஐ விசாரணையை தொடங்கக்கோரி, கூட்ட நெரிசலில் பலியான பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன் சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசனும், சந்திராவின் கணவர் செல்வராஜ் சார்பில் வக்கீல் ஏ.லட்சுமி நாராயணனும் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜக வக்கீல் ஜி.எஸ்.மணியும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. த.வெ.க சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜரனார்.

தவெக தரப்பில் வாதம்

சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி செந்தில் குமார், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து எடுத்த எடுப்பிலே உத்தரவிட்டுள்ளார். இத்துடன் விஜய் மற்றும் முன்னணி தலைவர்களின் தரப்பு வாதங்களை கேட்காமலேயே அவர்கள் குறித்து கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார் என்ற வாதத்தை முன்வைத்தார்.

அப்போது, மதுரை உயர் நீதிமன்ற கிளை வரம்புக்குட்பட்ட கரூர் விவகாரத்தை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது எப்படி என கேள்வி எழுப்பினார். இதற்கு த.வெ.க. தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.ஏ. சுந்தரம், இதுபோன்ற விவகாரத்தை விசாரிக்க சிறப்பு அமர்வை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் இந்த வழக்கில் ஏற்படுத்தவில்லை" என்று வாதிட்டார்.

எஸ்.ஐ.டி விசாரணை

மேலும், விஜய் சம்பவ இடத்தை தப்பி ஓடிவிட்டார் என்று கூறுவது தவறானது. நிலமை மேலும் மோசமாகும் என கூறி அவர்களை புறப்பாடுமாறு காவல்துறைதான் வற்புறுத்தி பாதை அமைத்து கொடுத்தது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. அந்த குழுவில் இடம் பெறும் பெயர்களை தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை. நேர்மையான அதிகாரியான அஸ்ரா கர்க், சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளதால் விசாரணையை சந்தேகிக்க வேண்டியதில்லை" என்று வாதிட்டார்.

விஜய் தாமதமாக வந்ததே காரணம்

அதேபோல, விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் காலதாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம் என்றும் வில்சன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதேபோல கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிபிஐ விசாரணை வேண்டும் என்று வாதம் முன்வைத்தனர். பிரேத பரிசோதனை தொடர்பாகவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க கூறிய உச்ச நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு வரும் திங்கட்கிழமை பிறப்பிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+