கோவை ஈஷாவுக்கு திருப்புமுனை தந்த முகுல் ரோத்தகியின் வாதம்.. உச்ச நீதிமன்றத்தில் நேற்று என்ன நடந்தது?
டெல்லி:கோவை ஈஷா யோகா மையத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்து வைத்து உத்தரவிட்டது. அதே சமயம் ஈஷா மையத்துக்கு எதிரான வழக்குகளை தமிழக போலீசார் விசாரிக்க தடை இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். நேற்று ஈஷா சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி வைத்த வாதங்கள் என்ன? அரசு தரப்பு, எதிர் தரப்பின் வாதங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்,
காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அண்மையில் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்ற தனது மகள்கள் லதா, கீதாவை மூளைச்சலவை செய்து சன்னியாசிகளாக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே இதை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசரமாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த அக்டோபர் 3-ந்தேதி விசாரித்தது. அத்துடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும், பதில் மனு தாக்கல் செய்ய எதிர் மனுதாரர் காமராஜுக்கும் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் காமராஜ் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா யோகா மையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அப்போது அவர் வாதிடுகையில், 'தமிழ்நாடு அரசின் அறிக்கையில் இரு பெண் துறவிகளும் சொந்த விருப்பத்தின் பேரில் தங்கி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதில் நியாயமில்லை. ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை’ என வாதிட்டார்.
தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா ஆஜரானார். அப்போது அவர் வாதிடுகையில்,. 'ஈஷா மையம் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்கு ஆட்கொணர்வை முடித்து வைக்கும் உத்தரவு தடையாக இருக்காது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று வாதிட்டார்.
காமராஜ் தரப்பு வக்கீல் புருஷோத்தமன் ஆஜராகி வாதிடுகையில, 'கோவையில் ஈஷா மையம் அமைந்துள்ள பகுதியில் யானைகள் நடமாட்டம் தொடர்பான அச்சுறுத்தல் இருப்பதால், மகள்கள் குறித்த கவலை உள்ளது. எனவே நாடு முழுவதும் உள்ள அனைத்து மதங்களின் ஆசிரமங்கள், சத்திரங்கள், மடங்கள், விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வாரம் ஒருமுறை பெண் போலீசை அனுப்பி அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். அனைத்து தரப்பு வாதங்ளுக்கு பின்னர் உச்ச நீதிமன்றம், கோவை ஈஷா மையத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது. அதே சமயம் ஈஷா யோகா மையம் தொடர்பாக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளை தமிழ்நாடு போலீஸ் விசாரிக்க எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.












Click it and Unblock the Notifications