மெகுல் சோக்ஸியின் மோசடியில்.. மனைவி ப்ரிதி சோக்ஸின் முழு பங்களிப்பு உறுதி.. முக்கிய ஆவணங்கள் சிக்கின
டெல்லி: மெகுல் சோக்ஸியின் மோசடியில் அவரது மனைவி பெரும் பங்கு வகித்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் வைர வியாபாரி மெகுல் சோக்ஸி.
நாட்டையே உலுக்கிய இந்த மோசடி மன்னன் மெகுல் சோக்ஸி 2018-ஆம் ஆண்டு முதல் ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார்.
மோசடி மன்னன்
கடந்த மாத இறுதியில் ஆன்டிகுவாவில் உள்ள வீட்டிலிருந்து திடீரென மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் 3 நாளில் டொமினிகாவில் சிக்கினார். மெகும் சோக்ஸியை (Mehul Choksi) நாடு திருப்பி அழைத்து வர, இந்தியா சட்ட ரீதியாக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சிக்கிய ஆதாரம்
விரைவில் மெகுல் சோக்ஸி நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மெகுல் சோக்ஸிக்கு அடுத்த அடியாக அவரது மனைவி ப்ரிதி சோக்ஸின் மோசடியை நிரூபிக்க அமலாக்கத்துறைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
மிக முக்கிய பங்கு
மெகுல் சோக்சியின் மனைவி அவரது குற்றச் செயல்களில் தீவிர பங்காளியாக இருந்ததாகவும், முழு குற்றத்திலும் அவர் முக்கிய பங்கு வகித்ததாகவும் ஆவணங்கள் கிடைத்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மாற்றுவதில் ப்ரிதி சோக்ஸி நேரடியாக ஈடுபட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன,
அடுத்தகட்ட நடவடிக்கை
துபாயில் சொத்துக்களை வாங்குவதற்காக பி.என்.பி மோசடி பணத்தை மாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துபாயில் மட்டும் 3 ஷெல் நிறுவனங்களுக்கு ரூ.391 கோடி பணத்தை மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆவணங்களை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.