ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களை அனுப்பி.. வன்முறையை தூண்டுகிறார்கள்... விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு!
டெல்லி: ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களை அனுப்பி, கலகத்தை விளைவிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டியின் தலைவர் சத்னம் சிங் பன்னு தெரிவித்தார்.
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் யாரும் வன்முறையில், ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.
விவசாயிகளுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் சத்னம் சிங் பன்னு தெரிவித்தார்.

டெல்லியில் பதற்றம்
டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது.

வன்முறையில் ஈடுபடவில்லை
இதனை தொடர்ந்து தற்போது விவசாயிகள் டெல்லியின் காசிப்பூர், சிங்கு, திகிரி ஆகிய எல்லை பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பில் வருகின்றனர். இந்த நிலையில் கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டியின் தலைவர் சத்னம் சிங் பன்னு நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் யாரும் வன்முறையில், ஈடுபடவில்லை.

திரும்பி செல்லமாட்டோம்
எங்களுக்கு எதிராக ஏதோ சதி நடந்திருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தைச் சீர்குலைக்க பல்வேறு மோசமான தந்திரங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களை அனுப்பி, எங்களுக்குள் கலகத்தை விளைவிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதுபோல் இருமுறை நேற்று நடந்தது. எதற்கும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், வேளாண் சட்டங்களைத் வாபஸ் பெறாமல் திரும்பிச் செல்லமாட்டோம்.

வழக்குகள் திரும்ப பெற வேண்டும்
இன்னும் அதிகமான விவசாயிகள் பல்வேறு எல்லைகளில் நடக்கும் போராட்டத்தில் இணைவார்கள். போராடும் விவசாயிகள் யாரும் செங்கோட்டைக்குச் செல்லவில்லை. நாங்கள் திட்டமிட்டபடி போலீஸார் கூறிய சாலையில்தான் சென்றோம். பாதை மாறிச் செல்லவில்லை. மத்திய அரசு தங்களுக்குச் சொந்தமான ஆட்களைச் செங்கோட்டைக்கு அனுப்பிவைத்து வன்முறையில் ஈடுபட வைத்து வழக்குகளை மட்டும் எங்களுக்கு எதிராகப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று சத்னம் சிங் பன்னு கூறினார்.












Click it and Unblock the Notifications