மே.வங்கம்: போராடும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப உச்சநீதிமன்றம் கெடு! உத்தரவை மீறினால் நடவடிக்கை!
டெல்லி: மேற்கு வங்கம் ஆர்ஜி கர் மருத்துவமனை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை (செப்டம்பர் 10-ந் தேதி) மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மேலும் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நிலை என்ன என்பதை சிபிஐ அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவத்தை மேற்கு வங்க அரசு கையாண்ட விதமும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை படுகொலை தொடர்பாக சஞ்சய் ராய், மருத்துவக் கல்லூரி முன்னாள் முதவர் சந்தீப் கோஷ் உள்ளிட்டோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். ஆர்ஜி கர் மருத்துவமனை படுகொலைக்கு நீதி கோரி நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் இரவும் பகலுமாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஆர்ஜி கர் பலாத்காரம், படுகொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து ஆர்ஜி கர் படுகொலை சம்பவத்தை விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இதனை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தாமதமாக செயல்பட்டதற்கு கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்திருந்தது. அத்துடன் போராடி வரும் மருத்துவ மாணவர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணை முன்னர், 10 பேர் குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்திருந்தது.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, ஆர்ஜி கர் மருத்துவமனை படுகொலை விவகாரத்தை முன்வைத்து போராடும் மருத்துவர்கள் தங்களது பணிக்கு நாளை மாலை 5 மணிக்குள் திரும்ப வேண்டும்; அப்படி திரும்பும் மருத்துவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி நாளை பணிக்குத் திரும்பாத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications