"மீண்டும் குப்பை தொட்டிக்குள்!" பாஜக பக்கம் சாய்ந்த நிதிஷ்குமார்! விளாசிய லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா
டெல்லி: நிதிஷ்குமார் இப்போது பாஜக கூட்டணியில் இணைந்து மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்றுள்ள நிலையில், அதை லாலு பிரசாத் யாதவின் மகளான ரோகிணி ஆச்சார்யா கடுமையாகச் சாடியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய அரசியல் குழப்பம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளார்.

இதற்கிடையே ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகளான ரோகிணி ஆச்சார்யா நிதிஷ்குமாரை விமர்சிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குப்பை வண்டி ஒன்றின் படத்தைப் பகிர்ந்த அவர், 'குப்பை இப்போது மீண்டும் தொட்டியில் இருக்கிறது என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
நிதிஷ்குமார்: பீகாரில் கடந்த சில நாட்களாகவே அரசியல் குழப்பம் நிலவி வந்தது. ஆர்ஜேடி- காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த ஜேடியு நிதிஷ்குமார் அந்த கூட்டணியில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. அவர் மீண்டும் பாஜக உடன் கை கோர்க்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதை நிதிஷ்குமார் தரப்பு நேற்று வரை உறுதி செய்யவும் இல்லை மறுக்கவும் இல்லை.
இந்தச் சூழலில் தான் இன்று நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கடந்த சில நாட்களாகப் பரவிய தகவல்களுக்கு ஏற்ப அவர் மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்து முதல்வர் பதவியை ஏற்றார். காலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர், மாலையில் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். அவர் 9ஆவது முறையாகப் பீகார் மாநில முதல்வராகப் பதவியேற்றார்.
பாஜக போடும் ஸ்கெட்ச்.. அடிக்கடி கூட்டணி மாறும் நிதிஷ்குமாருக்கு ஓகே சொல்ல என்ன காரணம்! பிண்ணனி
ரோகிணி ஆச்சார்யா தாக்கு: இதற்கிடையே இதைச் சாடும் வகையிலேயே பிரசாத் யாதவின் மகளான ரோகிணி ஆச்சார்யா பதிவிட்டுள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "குப்பை மீண்டும் குப்பைத் தொட்டிக்குள் செல்கிறது.. துர்நாற்றம் வீசும் குப்பை!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறிய நிலையில், அதையும் ரோகிணி ஆச்சார்யா விமர்சித்து இருந்தார். இந்த விவகாரத்தில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இறுதி மூச்சு இருக்கும் வரை.. நாட்டை பிளவுபடுத்தும் நபர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்து என்ன: நிதிஷ்குமார் மீண்டும் பாஜக உடன் கை கோர்ப்பது எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு மிகப் பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்தியா கூட்டணியை உருவாக்கிய முக்கிய தலைவர்களில் ஒருவர் நிதிஷ்குமார். இந்த நேரத்தில் லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் போது, அவரே கூட்டணியில் இருந்து விலகுவது எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பீகாரில் 40 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், நிதிஷ்குமார்+ பாஜக கூட்டணி அங்கு போட்டியைக் கடுமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
முன்னதாக இன்று காலை நிதிஷ்குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவர், "நான் முன்பு இருந்த கூட்டணியில் இருந்து விலகுகிறேன். புதிய கூட்டணியை அமைக்கப் போகிறேன்" என்றார். இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் நிதிஷ்குமார் பாஜக உடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications