மொழியின் பெயரால் மக்களை பிரிக்க முயலும் கட்சிகள்.. மத்திய பாஜக அரசு அப்படி இல்லை. பிரதமர் மோடி
டெல்லி: மொழியின் பெயரால் மக்களைப் பிரிக்க அரசியல் கட்சிகள் முயலுகின்றன; ஆனால் மத்திய பாஜக அரசு மொழியை வேலைவாய்ப்புக்கான ஊடகமாக மாற்றி இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவில் இன்று காணொலி காட்சி மூலம் பேசியதாவது: வேலைவாய்ப்புத் திருவிழா என்பது இந்த அரசின் புதிய அடையாளமாக அமைந்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் 70,000 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநில அரசுகளும் இது போன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இவர்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சியில் தங்களின் பங்களிப்பை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது நாட்டில் வேலைவாய்ப்புகளும் சுய வேலைவாய்ப்புக்கான சூழல்களும், பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. முத்ரா திட்டம், ஸ்டார்ட்அப் இந்தியா , ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற பல்வேறு அரசின் திட்டங்கள் இருக்கின்றன. முன் எப்போதும் இல்லாத வகையில், இளைஞர்கள் அரசுப் பணியில் சேருவதற்கான இயக்கங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. பணியாளர்கள் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), மத்திய அரசுப் பணியார்கள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) போன்றவற்றின் மூலம் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டு அதிகப் பணிகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கான தேர்வு நடைமுறைகளை எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதில் கவனம் செலுத்துகின்றன.
வாகன உற்பத்தித் துறையில், அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.5 சதவீத பங்களிப்பை வழங்கி உள்ளது. மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகனத் தொழில்துறையின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது இந்தத் தொழில்துறையின் மதிப்பு ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியா அதிக நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வலிமை கொண்ட நாடாக உள்ளது.

அரசுத்துறை வேலைவாய்ப்பு நடைமுறைகளில் முன்பு, வாரிசு முறைகள், பரிந்துரைகள் மற்றும் பாரபட்சங்கள் இருந்தன. உணவகங்களில் உணவுகளுக்கு விலைப் பட்டியல் வைத்திருப்பதைப் போல, பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளுக்கு பல விதமான தொகை வசூலிக்கப்பட்டன. ரயில்வே அமைச்சராக இருந்த ஒருவரது பதவிக்காலத்தின் போது, ரயில்வே வேலைவாய்ப்புக்கு நிலம் மோசடி தொடர்பான புகார்கள் எழுந்தன. அது தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரித்து வருகிறது. வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் அதுபோன்ற கட்சிகள் தொடர்பாகவும், வேலைவாய்ப்புகளின் பெயரால் இளைஞர்களை மோசடி செய்வோர் குறித்தும் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
சில அரசியல் கட்சிகள் மொழியின் பெயரால் மக்களை பிரிக்க முயல்கின்றன. தற்போதைய மத்திய அரசு மொழியை வேலைவாய்ப்புக்கான வலுவான ஊடகமாக மாற்றியுள்ளது. வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் தாய் மொழியில் நடத்தப்படுவது இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது.












Click it and Unblock the Notifications