அமேதி தொகுதியில்.. லேசர் துப்பாக்கியால் ராகுல் காந்தியை 7 முறை கொல்ல முயற்சி.. காங் அதிர்ச்சி புகார்
Recommended Video

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ராகுல் காந்தியை லேசர் குண்டு மூலம் கொலை செய்ய சதி நடந்ததாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகாரை அளித்தது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி பாரம்பரிய வேட்டி சட்டை உடையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் தனது தந்தையின் தொகுதியான அமேதி தொகுதியில் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் 3 கிலோ மீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் சாலை பிரசாரம் செய்தார்.

தொண்டர்கள்
அந்த சாலை பிரசாரத்தில் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோர் இருந்தனர். இந்த சாலை பிரசாரத்தின் போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தப்படி இருந்தனர்.

பரபரப்பு
அவர்களுக்கு ராகுலும், பிரியங்காவும் கை கொடுத்தபடி உற்சாகப்படுத்தினர். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராகுலை கொல்ல முயற்சி நடந்ததாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், அகமது படேல் மற்றும் ரன்தீப் சிங் சுரேஜ்வாலா ஆகியோர் கையெழுத்திட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பாதுகாப்பு கேட்டு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ராகுல் காந்தி மனு தாக்கல் செய்ய வந்த போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாகதான் இருந்தன. அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.

7 முறை முயற்சி
சாலை பிரசாரத்தின் போது அவரை நோக்கி லேசர் கதிர் வீச்சுகள் வந்தன. பச்சை நிறத்திலான அந்த கதிர்கள் அவரது தலையை குறி பார்த்து குறிப்பாக இரு முறை அவரது வலது தலை பகுதியில் வந்தன. இது போல் அந்த கதிர்கள் அவர் மீது 7 முறை பாய்ந்தது.

பாதுகாப்பு
நீண்ட தூரத்திலிருந்து கொண்டு ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல்காந்தியை கொல்ல சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

வீடியோ இணைப்பு
லேசர் கதிர் ராகுல் மீது பாய்ந்த விவகாரத்தில் மத்திய உள்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ராகுல்காந்தியின் பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் இந்த சம்பவம் எங்களுக்கு அச்சத்தை எழுப்பியுள்ளது என காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. அந்த கடிதத்துடன் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications