உ.பி.யில் சட்டம் ஒழுங்கு மொத்தமாகவே சீர்குலைந்துவிட்டது.. பாஜக யோகி அரசை பந்தாடிய உச்சநீதிமன்றம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து போய்விட்டதாக அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை மிக கடுமையாக விமர்சித்துள்ளது உச்சநீதிமன்றம். புல்டோசர் மூலம் வீடுகளை இடித்த வழக்கிலும் உ.பி. அரசு மீது உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது.
உத்தரப்பிரதேச மாநில அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. இதில், சிவில் வழக்கை குற்றவழக்காக மாற்றிய உ.பி. போலீசாருக்கு எதிரான வழக்கும் ஒன்று.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞசீவ் கன்னா பெஞ்ச் முன்பாக நேற்று சிவில் வழக்கை, குற்றவழக்காக உ.பி. போலீஸ் மாற்றியதற்கு எதிரான மனு மீது விசாரணை நடைபெற்றது. உ.பி. நொய்டாவைச் சேர்ந்த தேபு சிங், தீபக் சிங் இருவர் மீதான சிவில் வழக்கை நொய்டா போலீசார் குற்ற வழக்காகப் பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு நொய்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தங்கள் மீதான நொய்டா நீதிமன்றத்தில் நடைபெற்றும் குற்ற வழக்கை ரத்து செய்யக் கோரிதான் தேபு சிங், தீபக் சிங் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பெஞ்ச் கூறியதாவது: உத்தரப்பிரதேசத்தில் பல தவறான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சாதாரணமான சிவில் வழக்குகளைக் கூட குற்ற வழக்குகளாக மாற்றுகின்றனர். பணம் திருப்பித் தரவில்லை என்பது குற்றவழக்காக கருத முடியாது. அப்படி குற்ற வழக்காக பதிவு செய்வது அபத்தமானது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீர்குலைந்து போய்விட்டதையே இவை காட்டுகின்றன. ஆகையால் இந்த வழக்கில் முதல் விசாரணை அதிகாரி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஏன் குற்ற வழக்காக பதிவு செய்தார்? என்பதை விளக்க வேண்டும். அத்துடன் நொய்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கும் தடை விதிக்கப்படுகிறது. ஆனால், காசோலை திரும்பியது மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.
அண்மையில் புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடிப்பதற்கு எதிராக உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் மிக கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications