தமிழ் இந்துக்களிடம் கத்துக்கோங்க! டெல்லி முஸ்லிம் வீடுகள் இடிப்புக்கு எம்.பி. நவாஸ் கனி கண்டனம்
டெல்லி: தமிழ்நாட்டில் அமைதியான முறையில் சித்திரை திருவிழா நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழ் மக்களிடம் சங்பரிவார கூட்டம் சகோதரத்துவத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், "ஜஹாங்கிர்புரி பகுதியில் இடிக்கப்பட்டது ஏழை மக்களின் கடைகளும், வீடுகளும் மட்டுமல்ல இந்த நாட்டின் ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் தான்.
இதயமற்ற சங்பரிவார் கூட்டம் தமிழக இந்து சகோதரர்களிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும்.

முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்
டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து இதயமற்ற சங்பரிவார் கூட்டங்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்படுகிறது, இஸ்லாமியர்களின் உடமைகள் தவிர்க்கப்படுகிறது, பாதுகாப்பற்ற நிலையில் அங்குள்ள இஸ்லாமியர்கள் தவித்து வருகின்றனர்.

புல்டோசர் கலாச்சாரம்
இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஜஹாங்கிர்புரி பகுதிக்குள் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இஸ்லாமிய ஏழை எளிய மக்களின் வீடுகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த நடவடிக்கையை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவு மீறல்
இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பிறகும் இரண்டு மணிநேரம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டன. வீடுகளை தான் இடித்து விட்டீர்கள் உடமைகளையாவது விட்டுவிடுங்கள் என அந்த மக்கள் கதறும் கதறல் இதயமற்ற சங்பரிவார் கூட்டங்களில் காதுகளுக்கு ஏனோ கேட்கவே இல்லை.
Recommended Video

தமிழ்நாட்டை பாருங்கள்!
இத்தகைய அத்துமீறலும் நீதிமன்ற அவமதிப்பும் கடும் கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சிறிது நாட்களுக்கு முன்பு தமிழகத்திலும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான இந்து தொப்புள்கொடி உறவுகள் கலந்து கொண்டனர். எந்தவித கூச்சலும் இல்லை, கோசமும் இல்லை. ஏனென்றால் இங்கு சகோதரத்துவத்தோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வருகின்றோம்.
ஊர்வலம் என்ற பெயரில் அத்துமீறும் கலாச்சாரம் இல்லாத நல்லிணக்கம் மிகு பூமி தமிழகம்.
இதயமற்ற சங்பரிவார் கூட்டங்கள் தமிழக இந்து சகோதரர்களிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும்." என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications