பொய் கண்டுபிடிக்கும் மிஷினே நின்னு போயிடும்.. பிரதமர் மோடியை அட்டாக் செய்த ஆர்.ஜே.டி தலைவர்!
டெல்லி: பொய் பேசுவதைக் கண்டறியும் மெஷின் ஒன்றை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் வைத்தால், அவர் பேசும் பொய்களைக் கேட்டு மெஷினே நின்றுவிடும் என ஆர்ஜேடி தலைவர் மனோஜ் குமார் ஜா விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி மனோஜ் குமார் ஜா. அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் மிகவும் கீழ்த்தரமாகப் பேசி வருகிறார். அவரது தரக்குறைவான பேச்சுகளின் காரணமாகவே இந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைவார்.

தோல்வியைச் சந்திக்கப் போகிறோம் என்பது தெரிந்துள்ளதால் தான் அபத்தமான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் பொய்களைக் கண்டறியும் இயந்திரம் அமைக்கப்பட்டால், அவரது பொய்களால் அந்த இயந்திரமே வேலை செய்வதை நிறுத்திவிடும்." என காட்டமாக விமர்சித்துள்ளார் மனோஜ் குமார் ஜா.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தேர்தலையொட்டி நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடி, பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் கருத்துகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி பற்றியும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத வாக்குறுதிகளை சொன்னதாகவும் மோடி மக்கள் மத்தியில் பொய் பேசி வருவதாக விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications