பொறுத்திருந்து பாருங்க.. கருத்துக் கணிப்புகளை தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும்.. சோனியா காந்தி!
டெல்லி : லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலைவரான கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக தலைவராக அரை நூற்றாண்டு காலமும், தமிழ்நாடு முதலமைச்சராக 18 ஆண்டுகளும் இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக நிர்வாகிகளான டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோரும் இருந்தனர். அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தினர். அதன்பின் ராகுல் காந்தியும் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்கள் தரப்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொறுத்திருந்து பாருங்கள்.. கருத்துக் கணிப்புகளை தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும். நிச்சயம் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வென்றாலே போதும் என்ற நிலையில், பாஜக கூட்டணி 350 முதல் 380 தொகுதிகள் வரை வெல்லும் என்று சில கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. அதேபோல் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக ஒரு சில கருத்துக் கணிப்புகள் மட்டுமே வெளியாகியுள்ளன.
இருந்தாலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் கருத்துக் கணிப்புகளை மொத்தமாக புறந்தள்ளியுள்ளனர். 2004ஆம் ஆண்டு பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்றே கூறப்பட்டிருந்தன. ஆனால் கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications