மோடியின் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு.. பிரதமர் வீடு முதல் பாஜக அலுவலகம் வரை.. திட்டமிட்ட அமித் ஷா!
டெல்லி : நாளை மாலை 4 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜகவின் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நாட்டில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்த நிலையில், மே 1ஆம் தேதி 7வது கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்தியாவில் நீண்ட நாட்களாக நடத்தப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் பெரும்பாலும் பாஜக ஆட்சியே மீண்டும் அமையும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியிட்டுள்ளன. சில நிறுவனங்கள் பாஜக 350 முதல் 380 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஏற்கனவே தொடர்ச்சியாக இரு முறை நரேந்திர மோடி பிரமராக இருந்த நிலையில், 3வது முறையாகவும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே முன் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜக 300 தொகுதிகளில் வென்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் என்று அக்கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர். வட இந்தியா மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் பாஜகவின் வளர்ச்சி இருக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாளை லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படவுள்ள நிலையில், 8.30 மணி முதல் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதன்பின் நாளை மாலை 4 மணிக்கு பாஜகவின் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வீட்டில் இருந்து டெல்லி பாஜக அலுவலகம் வரை நரேந்திர மோடியின் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாஜகவின் பலத்தை நிரூபிப்பதை கொண்டாடும் வகையில் இந்த பேரணி நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications