ஆலோசனை.. அடுத்தடுத்த சோஃபாவில் அமர்ந்த நரேந்திர மோடி, சோனியா காந்தி.. பரபரத்த ஓம் பிர்லா ஆபீஸ்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகிய இருவரும் சபாநாயகர் ஓம் பிர்லா அறையில் இன்று ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது பற்றிதான், இப்போது டெய்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே, இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து பெகாசஸ் என்ற உளவு சாப்ட்வேரை வாங்கி இந்தியாவிலுள்ள எதிர்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான ஊடக செய்தி விவகாரம் பூதாகரமாக கிளம்பியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசின் பதிலை எதிர்பார்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி நடத்தினர். இதனால் பெரும்பாலான பணிகள் தடைபட்டு போயின.

பெகாசஸ் உளவு
இந்த உளவு சாப்ட்வேரை மத்திய அரசு வாங்கியதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கையாக இருந்தது. நேரடியாக இதற்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இருப்பினும் பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பாக எந்த ஒரு பரிவர்த்தனையையும் இஸ்ரேல் நிறுவனத்துடன் செய்து கொள்ளவில்லை என்று ராஜ்யசபாவில் இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்தது. அந்த அமைச்சகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தது.

முன்கூட்டியே முடிந்த லோக்சபா கூட்டத் தொடர்
பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் யாராவது இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் அது நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால் இரு தினங்களுக்கு முன்பாக இன்று லோக்சபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

உடைந்து பேசிய வெங்கையா நாயுடு
இதனிடையே ராஜ்யசபாவில் பேசிய துணைக் குடியரசுத் தலைவரும் , ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு, ராஜ்யசபா மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றதாக வருத்தம் தெரிவித்தார். அவரது பேச்சு விம்மல்லாக இருந்தது. தழுதழுத்த குரலில் அவர் பேசினார். ராஜ்யசபா மாண்பு இதுபோன்ற தர்ணா போராட்டங்களால் களங்கப்படுவதாக அவர் வேதனைப்பட்டார்.

ஆலோசனைக் கூட்டம்
இதனிடையே, இன்று மாலை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார். இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அகாலி தளம் கட்சிகளின் பிரதிநிதிகள், பிஜு ஜனதா தளம் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திமுக சார்பில் டிஆர் பாலு இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

அருகருகே மோடி மற்றும் சோனியா அமர்ந்திருந்தனர்
அப்போது எதிர்வரும் கூட்டத் தொடர்களில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் அவை நடவடிக்கையை பாதிக்காமல் அவையை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஒரே சோபாவில் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்திருந்தனர். அருகே போடப்பட்டிருந்த மற்றொரு சோபாவில் சோனியாகாந்தி அமர்ந்து இருந்ததை பார்க்க முடிந்தது. அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் நரேந்திர மோடி மற்றும் சோனியா காந்தி ஆகிய இருவரும் சபாநாயகர் அலுவலகத்தில் ஒரே இடத்தில் அருகருகே அமர்ந்து இருந்தது முக்கிய நிகழ்வாக பேசப்படுகிறது.

மோடியை இப்போதுதான் பார்க்கிறேன்
நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி அளித்த பேட்டியில், நான் பிரதமர் நரேந்திர மோடியை இன்று தான் பார்க்கிறேன் . அனைத்தும் முடிவடைந்த பிறகு விளம்பரத்துக்காக நரேந்திரமோடி எல்லார் முன்பும் தோன்ற ஆரம்பிக்கிறார். நாடாளுமன்றத்தில் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் பல சட்ட மசோதாக்கள் நிறைவேற்ற பட்டிருக்கின்றன. இதர பிற்படுத்தப்பட்டோர் சட்டத்தை தவிர மற்ற அனைத்தும் சில நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதான் இந்த அரசின் மற்றுமொரு சாதனை என்று அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் வருத்தம்
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, நிருபர்களிடம் கூறுகையில் , கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நடைபெற வேண்டிய லோக்சபா நிகழ்வு, வெறும் 21 மணிநேரம் மட்டும் தான் நடந்துள்ளது. எதிர்பார்ப்பில் 22 சதவீதம் மட்டும்தான் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. லோக்சபா அலுவல்கள் இவ்வாறு தடைபடுவது எனக்கு வேதனை தருகிறது. முடிந்த அளவு அதிகப்படியான அலுவல்கள் நடைபெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்கு எவ்வளவோ முயற்சிகளை எடுத்தேன். ஆனால் தொடர்ந்து தடைக்கற்கள் அதை தடுத்து விட்டன என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications