அதிமுக, காங். வெளிநடப்பு .. லோக்சபாவில் நிறைவேறியது முத்தலாக் மசோதா
டெல்லிமுத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டபோதிலும், சட்ட மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ், அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தலாக் என்று மூன்று முறை சொல்லி பெண்களை இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறைக்கு எதிராக மத்திய பாஜக அரசு கடந்த செப்டம்பர் மாதம் மசோதா தாக்கல் செய்தது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் இந்த மசோதா தோல்வி அடைந்தது. இதையடுத்து மத்திய அரசு இதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்து, முத்தலாக் முறைக்கு தடை விதித்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.
மசோதா மீது விவாதம்
அவசர சட்டம் ஆறு மாதத்திற்குள் காலாவதியாகிவிடும் என்பதால் இந்த சட்டத்தை மீண்டும் மசோதாவாக தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, இன்றைய கூட்டத்தில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்த மசோதா மீது விவாதம் தொடங்கியது.
மதச்சார்பற்ற நாடு
அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முத்தலாக் முறையை 20 இஸ்லாமிய நாடுகள் தடை செய்துள்ளன. பின்னர் ஏன் இந்தியாவைப் போன்ற ஒரு மதச்சார்பற்ற நாட்டில் அதனை பின்பற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அரசியல் ரீதியாக இதனைப் பார்க்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், இந்த மசோதா எந்தவொரு சமூகத்திற்கோ, மதத்திற்கோ, நம்பிக்கைகோ எதிரான அல்ல. பெண்களின் உரிமைகள் மற்றும் நீதி பற்றியது என்றார்.
அதிமுக கடும் எதிர்ப்பு
இதனிடையே, முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், முத்தலாக் மசோதா மீது விவாதம் நடத்த கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. அதே நேரம், முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
திருத்தப்பட்ட தற்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக எம்.பி அன்வர் ராஜா பேசுகையில், முத்தலாக் மசோதாவை தற்போதைய வடிவில் ஏற்க முடியாது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றார். நாடாளுமன்ற தேர்வு கமிட்டிக்கு சட்ட மசோதாவை அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரினர்.
ஆதரவு 245 எதிர்ப்பு 11
ஆனால், வரதட்சணை கொடுமை சட்டத்தைபோலத்தான் முத்தலாக் சட்டமும் என பாஜக உறுப்பினர்கள் பதில் தெரிவித்தனர். பல கட்சி உறுப்பினர்களும் பேசிய பிறகு, மாலை 6.45 மணியளவில் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அப்போது சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 245 வாக்குகளும், எதிர்ப்பாக 11 வாக்குகளும் பதிவாகின.