உடையும் ‛இந்தியா’ கூட்டணி? பிரச்சனைக்கு அச்சாரமாகும் மேற்கு வங்கம்? வெளியான பரபர தகவல்! என்னாச்சி?
டெல்லி: ‛இந்தியா' கூட்டணி சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சனை வெடிக்க அதிக வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் முன்கூட்டியே பாஜக நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன.

இந்த கூட்டணியின் 3 ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது. தற்போது ‛இந்தியா' கூட்டணியை ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மொத்தம் 13 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு தான் ‛இந்தியா' கூட்டணியின் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது.
இந்த குழுவில் காங்கிரஸின் கேசி வேணுகோபால், திமுகவின் டிஆர் பாலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வரும் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், சிவசேனா உத்தவ் அணியின் சஞ்சய் ராவத், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி சூர்வா இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி ராஜா உள்பட மொத்தம் 13 பேர் உள்ளனர்.
இவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்து முடிந்தது. இந்த கூட்டணியில் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் தொகுதி பங்கீடு மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் தொகுதி பங்கீட்டின்போது ‛இந்தியா' கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு பிரச்சனை வெடிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநில தொகுதி பங்கீட்டில் தான் பிரச்சனை உருவாகும் என கூறப்படுகிறது. மேலும் அதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். அங்கு பிரதான கட்சிகளாக காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளன. இதில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளன. இந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
ஏனென்றால் கடந்த வாரம் நடந்து முடிந்த துப்குரி சட்டசபை இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்த நிலையில் பாஜகவும் அங்கும் வேட்பாளரை களமிறக்கியது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது. இந்த இடைத்தேர்தல் என்பது ‛இந்தியா' கூட்டணி உருவான பிறகு நடந்தாலும் கூட அங்கு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது.
மேற்கு வங்காளத்தை பொறுத்தமட்டில் மொத்தம் அங்கு 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது அதிக இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில் தான் அந்த தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை. அதோடு மேற்கு வங்கத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு என்பது ஆண்டுதோறும் சரிந்து வருகிறது.
இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி விட்டு கொடுக்க விரும்பமாட்டார் என கூறப்படுகிறது. இதனால் அங்கு குழப்பம் உருவாக அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் மம்தா பானர்ஜி தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியுடன் நல்ல உறவை வைத்துள்ளார்.
இதனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் சுமூகமாக நடக்க வாய்ப்புள்ளது. மேலும் சோனியா காந்திக்காக, மம்தா பானர்ஜியும் தொகுதிகளை விட்டு கொடுக்க முன்வரலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மாறாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான தொகுதி பங்கீடு மிகவும் சிரமமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ‛இந்தியா' கூட்டணியில் முதல் பிரச்சனை என்பது மேற்கு வங்காளத்தில் இருந்து வரலாம் என கூறப்படுகிறது.
மேலும் தற்போது மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி துபாய், ஸ்பெயின் நாடுகளுக்கு 12 நாள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அங்குள்ளவர்களை அழைக்க அவர் சென்றுள்ளார். இதனால் தற்போது வரை மேற்கு வங்க மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. மம்தா பானர்ஜி இந்தியா திரும்பியவுடன் இந்த பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications