அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்னதான் தொடர்பு? அதானி விஸ்வரூபத்தின் பின்னணி யார்? ராகுல் ஆவேசம்
லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, அதானி குழுமத்தை மிக கடுமையாக சாடியதுடன் பிரதமர் மோடிக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
டெல்லி: ஒட்டுமொத்த தேசமே பேசுகிற அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்னதான் தொடர்பு? அதானியின் இமாலய வளர்ச்சியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று நாடாளுமன்ற லோக்சபாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி குழும மோசடிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். ஆனாலும் மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அதானி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் எதிர்க்கட்சி எம்பிக்களால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். அதானி குறித்து பல ஆண்டுகளாகவே பேசுகிறேன். இன்று அதானி விவகாரத்தை கண்டு மத்திய அரசு அச்சப்படுகிறது. அதானி குறித்த விவாதத்தைத் தவிர்க்க பிரதமர் மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார். அதானி குறித்த உண்மைகள் வெளியே வர வேண்டும். அதானிக்கு பின்னால் இருக்கும் சக்திகள் அடையாளம் காணப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேசியதாவது: ஒற்றுமை பயணத்தின் போது நாட்டு மக்களுடன் கலந்துரையாடினேன். பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுடனும் உரையாடுகிற வாய்ப்பு கிடைத்தது. அனைவரது கருத்தையும் நான் கேட்டேன். அக்னி வீரர்கள் எனப்படும் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தை முன்னாள் ராணுவ வீரர்களே கடுமையாக எதிர்க்கின்றனர். அக்னி வீரர்கள் எனப்படும் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டமானது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகத்தின் முடிவு. இது ராணுவத்தின் யோசனை அல்ல. அக்னி வீரர்கள் திட்டத்தால் நாட்டின் ராணுவம் பலவீனமடைந்துவிடும் என முன்னாள் ராணுவத்தினர் அச்சப்படுகின்றனர்.
நாட்டின் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை குறித்து மிகுந்த கவலைப்படுகின்றனர். 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் ஊதியம் கிடைக்கவில்லை என்கின்றனர். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டு மக்கள் பெரும் துயரத்தையும் துன்பத்தையுமே அனுபவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, கேரளா தொடங்கி இமாச்சல பிரதேசம் வரை எங்கெங்கும் அதானி பெயர்தான். இப்போது ஒட்டுமொத்த நாடும் அதானி குழுமம் பற்றி பேசுகிறது. 2014-ல் அதானி குழுமத்தின் மதிப்பு என்ன? 2023-ல் அதானி குழுமம் இப்படி பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றது எப்படி? அத்தனை தொழில்களிலும் அதானி குழுமம்தான் கால்பதிக்கிறது. அத்தனை தொழில்களிலும் அதானி குழுமம் மட்டுமே வெற்றி பெறுகிறது. அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு சில ஆண்டுகளிலேயே பல மடங்கு உயர்ந்தது. அதானி குழுமத்தின் இத்தகைய விஸ்வரூப வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது யார் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதானி குழுமத்துக்கு நாட்டின் விமான நிலையங்கள் வலுக்கட்டாயமாக தாரைவார்க்கப்படுகிறது. முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான தொழிலில் இறங்க முடியாது. ஆனால் அதானிக்காகவே விதிகள் திருத்தம் செய்யப்பட்டன.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையே அதானிக்கானதாக மாற்றப்பட்டது. அதானி குழுமம் டிரோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டதே இல்லை. ஆனால்
பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார். உடனே அதானி குழுமத்துக்கு ஒப்பந்தம் கிடைக்கிறது. பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றார். உடனே எஸ்பிஐ வங்கி 1 பில்லியன் டன் கொடுக்கிறது அதானி குழுமத்துக்கு. பிரதமர் மோடி வங்கதேசம் சென்றார். உடனே வங்கதேச ஒப்பந்தங்கள் அதானிக்கு கிடைக்கின்றன. அதானி குழுமத்துக்கும் பிரதமர் மோடிக்கும் என்னதான் தொடர்பு? .
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த காலத்தில் இருந்தே அதானியுடன் நெருக்கமாகவே இருந்தார். இப்போது பிரதமர் மோடிக்கு தோளோடு தோளாக நிற்கிறார் அதானி. 2014-ம் ஆண்டு மோடி பிரதமரான பின்னரே அதானி குழுமம் மேஜிக் வளர்ச்சியை பெற்றது. இவ்வாறு ராகுல் காந்தி பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தியை தொடர்ந்து பேசவிடாமல் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications