10ஆண்டு தண்டனைக்கு தடை-லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்க உத்தரவை வாபஸ் பெற்ற லோக்சபா செயலகம்
டெல்லி: கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக முன்னர் வெளியிட்ட உத்தரவை லோக்சபா செயலகம் திரும்பப் பெற்றது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருந்த சிறிது நேரத்துக்கு முன்னதாக லோக்சபா செயலகம், தகுதி நீக்க உத்தரவை வாபஸ் பெற்றது.
ல்ட்சத்தீவு லோக்சபா தொகுதி எம்பியாக இருப்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல். கொலை முயற்சி வழக்கு ஒன்றில் முகமது பைசலுக்கு கவரொட்டி நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

10 ஆண்டு சிறை தன்டனை விதிக்கப்பட்டதால் பைசல் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பைசல் எம்பி பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து லட்சத்தீவு லோக்சபா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கையும் வெளியிடப்பட்டது.
இதனிடையே முகமது பைசல் எம்பிக்கு கவரொட்டி நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனைக்கு கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் லட்சத்தீவு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது.
முகமது பைசலுக்கு விதித்த தண்டனைக்கு கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்து 2 மாதங்களாகியும் அவரது எம்பி பதவி தகுதி நீக்க உத்தரவு வாபஸ் பெறப்படவில்லை. இதனால் முகமது பைசல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சற்று முன்னதாக முகமது பைசல் எம்பி பதவியை பறித்த, தகுதி நீக்க உத்தரவை லோக்சபா செயலகம் இன்று வாபஸ் பெற்று உத்தரவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மேல்முறையீடு செய்வதற்காக அவரது சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இருந்த போதும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுவிட்டதாலேயே ராகுல் காந்தியின் எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் ராகுல் காந்தி வெற்றி பெற்ற வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி விவகாரத்தில் லோக்சபா செயலகம் படுவேகமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். அதேநேரத்தில் பைசல் விவகாரத்தில் 10 ஆண்டு தண்டனைக்க்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து 2 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காமல் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் லோக்சபா செயலகம் அவரது தகுதி நீக்க உத்தரவை வாபஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications