கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ.எழிலன் வழக்கு: நவ.7-ல் விசாரணை
டெல்லி: கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நவம்பர் 7-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

எமர்ஜென்சியால் பறிப்பு
அதில், இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த கால கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது. மாநில அரசின் சில அதிகாரங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976ம் ஆண்டு, மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனு சொல்வது என்ன?
மேலும் மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது, கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது ; கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றிம் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

கூடுதல் பெஞ்ச் நீதிபதிகள்
இந்த வழக்கு கடந்த மாதம் பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல் சட்ட பிரச்னை தொடர்பான இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை அமைக்க வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய மூன்று நீதிபதிகள் பெஞ்ச் அமைக்கப்பட்டது.

நவ.7-க்கு ஒத்திவைப்பு
இப்புதிய பெஞ்ச் முன்பாக இன்று விசாரணை நடைபெற்ற போது, இறுதி விசாரணைக்கு முன்னர் ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்; ஆகையால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசு, தமிழக அரசு தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்று நவம்பர் 7-ந் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications