மேகாலயா ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக.. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதன் நியமனம்
சென்னை: மேகாலயா ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதன். இந்த நிலையில், இன்று இவர் மேகாலயா ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதனை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது.

இதற்கிடையே மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக இருந்து வந்த சஞ்சீவ் பானர்ஜியின் பதவிக்காலம் முடிந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதன் மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவையில் பிறந்தவர் நீதிபதி எஸ். வைத்தியநாதன். சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை உயர்நிலை பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், 1979-82ல் அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து அவர் 1982-85 ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் BL, 1986 இல் தனிநபர் மேலாண்மை, தொழிலாளர் நலன் மற்றும் தொழில்துறை உறவுகளில் முதுகலை டிப்ளமோ படித்தார். தொடர்ந்து அவர்1986 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகச் பணியில் சேர்ந்தார்.
இதனை தொடர்ந்து 25.10.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று 14.04.2015 அன்று இந்த நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஆனார். இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியா இருந்த டி ராஜா ஓய்வு பெற்றதை அடுத்து, நீதிபதி எஸ் வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவரால் கடந்த ஆண்டு மே 24 ஆம் தேதி நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications