லோக்சபாவில் அதிகரிக்கும் பலம்.. "3 டிஜிட்" தொட்டது காங்கிரஸ்.. உற்று கவனிக்கும் பாஜக.. என்ன நடந்தது?
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மட்டும் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சுயேச்சையாக போட்டியிட்ட விஷால் பாட்டீல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் 3 டிஜிட்டை தொட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சுயேச்சை எம்பி ஒருவர் ஆதரவு கொடுத்துள்ளதால் காங்கிரஸ் கட்சியின் பலம் 100 ஆக உயர்ந்துள்ளது.

மகராஷ்டிராவில் சங்லி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஷால் படீல் சுயேச்சையாக போட்டியிடார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் வசந்ததாதா பாட்டீலின் மகனான இவர், தனக்கு சீட் மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக களம் இறங்கினார். இந்த தொகுதியை மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்கியது.
இதனால், அதிருப்தியில் சுயேச்சையாக இறங்கிய விஷால் பாட்டீல் காங்கிரஸ்க்கு அதிர்ச்சி கொடுத்தார். விஷால் பாட்டீல் சுயேச்சையாக போட்டியிட்டு 5,71,666 வாக்குகள் பெற்றார். பாஜக இரண்டாவது இடத்திற்கு வந்தது. 1,00,053- வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சஞ்செய் பாட்டீல் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் தான், விஷால் பாட்டீல் இன்று காங்கிரஸ் கட்சிகு ஆதரவு கொடுத்துள்ளார். இதன் மூலம் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் பலம் 100-ஆக உயர்ந்துள்ளது. மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- "எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஷால் பட்டீலை வரவேற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 உறுப்பினர்களை கொண்ட லோக்சபாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லை. பாஜக 240 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வென்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் என்ற எண்ணிக்கை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ளது. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எழுத்து பூர்வ ஆதரவை பாஜகவிற்கு அளித்தது. இதனால், மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. மோடி 3-வது முறையாக வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பதவியேற்க உள்ளார்.
குடியரசுத்தலைவரை சந்தித்து விரைவில் ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருவார் எனத் தெரிகிறது. மத்தியில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி தயராகி வருவதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக நேற்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பாஜக அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியா கூட்டணி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளுக்காக தொடர்ந்து போராடும். மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப நேரம் வரும் போது பாஜக அரசை அகற்ற முயற்சி எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபாவில் தற்பொது இந்தியா கூட்டணிக்கு 234 எம்பிக்கள் உள்ளனர். கட்சி வாரியாக பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு 99 எம்பிக்கள் உள்ளனர். சமாஜ்வாடி கட்சிக்கு 37 எம்பிக்களும் ஏஐடிசி கட்சிக்கு 29 எம்பிக்கள், திமுகவிற்கு 22 எம்பிக்கள் உள்ளனர். இந்த நிலையில், தான் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது மேலும் ஒரு எம்பி ஆதரவு கிடைத்துள்ளது. சுயேட்சையாக போட்டியிட்ட விஷால் பாட்டீல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்ததால் காங்கிரஸ் எம்பிக்கள் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications