சிபிஐ, அமலாக்கம் 5 ஆண்டு பணி நீட்டிப்பு சட்டத்தை எதிர்த்து மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி: சிபிஐ, அமலாக்கப்பிரிவு டைரக்டர்களுக்கு 5 ஆண்டு பணி நீட்டிப்பு செய்து மத்திய அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் திரிணாமுல் எம்.பி மஹுவா மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

திரிணாமுல் எம்.பி வழக்கு
சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களுக்கான பதவிக்காலத்தை 2 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த அவசரச்சட்டத்தை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்கள் பதவி காலம் 5 ஆண்டாக நீக்கும் சட்டம்
சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் பதவிக்காலம் தற்போது 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்துள்ளது. மத்திய ஊழல்தடுப்பு ஆணையம் திருத்தச்சட்டம்(2021) என்ற பெயரில் மத்திய அரசு அவசரச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு பின்னால் அரசியல் உள்ளது என பலரும் இதை கண்டித்து வருகின்றனர்.

மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமா?
வரும் 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடரில் நிறைவேற்றும் எண்ணத்தில் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத்தெரிவிக்கின்றனர். மத்திய அரசு சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை எதிர்க்கட்சிகளை, அரசை விமர்சிப்பவர்களை மிரட்டும் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்கிற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் வைக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான சட்டம்
சிபிஐ, அமலாகாகப்பிரிவு இயக்குநர்களுக்கு பதவிநீட்டிப்பு வழங்கி பிறப்பித்த அவசரச் சட்டம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வருவதற்கு முன்னோடியாக எதிர்க்கட்சிகளை மிரட்டவே இதுபோன்ற பதவி நீட்டிப்புகள் இயக்குனர்களுக்கு வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அரசுடன் மோது திரிணாமுல் காங்கிரஸ்
தொடர்ந்து மத்திய அரசிடம் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் திரிணாமுல் காங்கிரஸ். சிபிஐ நடவடிக்கைகளை கண்டித்து மாநிலத்திற்குள் அனுமதியின்றி சிபிஐ அதிகாரிகள் வரவே கூடாது என மே.வங்கத்தில் மம்தா உத்தரவிட்டார். இந்த சூழலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. மஹூமா மொய்த்ரா இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

மஹுவா மொய்த்ரா எதிர்த்து வழக்கு
இது குறித்து எம்.பி. மஹூமா மொய்த்ரா தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், " சிபிஐ, அமலாக்கப்பிரிவு இயக்குநர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச்சட்டம், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது. ஆதலால், உச்ச நீதிமன்றத்தில் அவசரச்சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளேன்" என்றுத் தெரிவித்துள்ளார். இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 2-வது மனு இதுவாகும். ஏற்கெனவே உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மா இந்த அவசரச்சட்டத்தை எதிர்த்து கடந்த செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
ஆனால், கடந்த 2018ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்ட மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் தான் இதுபோன்ற பதவி காலத்தை உயர்த்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications