"திடீர் மைக் ஆஃப்".. நிதி ஆயோக்கில் கொந்தளித்த மம்தா பானர்ஜி.. கோபமாக வெளிநடப்பு.. என்ன நடந்தது?
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் உள்பட ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் தான் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை அவமதித்ததாக கூறி கூட்டத்தில் இருந்து கோபமாக வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய திட்ட குழுவுக்கு மாற்றாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‛நிதி ஆயோக்' என்பதை உருவாக்கியது. நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பது இதன் நோக்கமாகும். அதேவேளையில் மாநில முதல்வர்கள் தங்களுக்கான திட்டத்தை கூறி நிதி ஒதுக்கீடு செய்யவும் கோரிக்கை வைக்கவும் இந்த அமைப்பு இடம் அளிக்கிறது.

அந்த வகையில் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவின் 9வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் ஆளும் முதல்வர்கள் அறிவித்தனர். அதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கா்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டவர்கள் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
மத்திய பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற மாநிலங்கள் புறக்கணிப்பட்டதாக கூறி அவர்கள் கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்றனர். இருப்பினும் கூட ‛இந்தியா' கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவருக்கு 5 நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மம்தா பானர்ஜி கூடுதல் நேரம் கேட்ட நிலையில் அவரது மைக் ஆப் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பாஜகவின் முதல்வர்கள், பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர்களுக்கு 10 முதல் 20 நிமிடம் வரை பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கோபமான மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து பாதியில் வெளிநடப்பு செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications