"என் அப்பாவையா அடிச்ச!" இளைஞர் முகத்தில் துப்பாக்கிச் சூடு! 7 மாதங்களுக்கு பின் பழிவாங்கிய சிறுவன்
டெல்லி: தலைநகர் டெல்லியில் சிறுவர்கள் சிலர், இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மைனர் சிறார்களின் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களால் மைனர் சிறார்கள் நேரடியாகப் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
நுபுர் சர்மா சர்ச்சை.. ராஞ்சியில் முஸ்லீம்கள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி
டெல்லி
இந்தச் சூழலில் டெல்லியில் அரங்கேறி உள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாலை முதலே இணையத்தில் ஒரு சிசிடிவி வீடியோ தான் வேகமாகப் பரவி வருகிறது. அதில் 36 வயது இளைஞர் ஒருவர் மொபைல்போனை பயன்படுத்திக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அந்தச் சமயத்தில் சில சிறார்கள் அந்தப் பக்கம் நடந்து செல்கிறார்கள்.
துப்பாக்கிச் சூடு
அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் அச்சிறுவர்களில் ஒருவர் அந்த இளைஞரின் முகத்தில் துப்பாக்கியால் சுடுகின்றனர். அந்த இளைஞர் முகத்தில் இருந்து ரத்தம் வடிகிறது. உடனடியாக அந்த சிறுவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடி விடுகின்றனர். டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலீசார்
இது தொடர்பாக டெல்லி வடமேற்கு டிசிபி உஷா ரங்கனி கூறுகையில், "சுமார் 5.15 மணி அளவில், துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவருக்கு வலது கண்ணில் காயம் ஏற்பட்டதாக எங்களுக்கு அவசர அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை இப்போது சீராக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
கைது
அந்த சிறார்கள் மிக அருகே இருந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தி உள்ளனர். இதனால் வலது கண் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அந்த சிறார்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறப்புப் பிரிவினர் மொத்தம் 4 சிறார்களை இந்த விவகாரத்தில் கைது செய்துள்ளனர்.
என்ன காரணம்
இது குறித்து பேலீசார் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் சிறார்கள் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியும் கைப்பற்றிவிட்டும். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சுமார் 7 மாதங்களுக்கு முன்பு, பிடிபட்ட மைனர் சிறார்களில் ஒருவரின் தந்தையைப் பாதிக்கப்பட்டவர் தாக்கி உள்ளார். அதற்காக அவரை பழிவாங்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி உள்ளனர். இது மத ரீதியான தாக்குதல் இல்லை. இரு தரப்பும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான்" என்றார்.