மணிப்பூர் வன்முறை: குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுடன் "இந்தியா" கூட்டணி நாளை சந்திப்பு
டெல்லி: இந்தியா கூட்டணி தலைவர்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மனு அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3- ம் தேதி முதல் இரண்டரை மாதங்களுக்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து குக்கி - மைத்தேயி மக்கள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

இது இன்னும் ஏற்கப்படாததால் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளித்து பேசும் விதமாக, மத்திய அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி விவாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே, ‛‛இந்தியா'' என்ற பெயரில் உருவாகி உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் எம்பிக்கள் மணிப்பூரை நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி 2 நாள் பயணமாக இன்று 21 பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு புறப்பட்டு சென்றது. அங்கு நிலவும் சூழலை நேரடியாக ஆய்வு செய்தது. இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்தியா கூட்டணி தலைவர்கள் நாளை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியிடம் மனு அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்து முறையிடவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications