எல்லாத்துக்கும் காரணம் மணிப்பூர் ஐகோர்ட்தான்: பிரதமர் மோடி கூறிய விஷயம்! அமித்ஷா சொன்ன அதே வார்த்தை!
டெல்லி: மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் ஒரு உத்தரவுதான் மிகப்பெரிய வன்முறையைத் தூண்டியுள்ளது என மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளார். நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போதும் இதே விஷயத்தையே குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி இன்று பதிலுரை ஆற்றினார். சுமார் ஒன்றரை மணி நேரம், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியையும், காங்கிரஸ் கட்சியையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் பிரதமர் மோடி. மணிப்பூர் விவகாரம் பற்றி பேசுங்கள் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் எழுப்பியும் கண்டுகொள்ளாமல் தனது பேச்சைத் தொடர்ந்து வந்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பிக்கள், மணிப்பூர் பற்றி பேசாத பிரதமர் மோடியை கண்டித்து வெளிநடப்பு செய்த நிலையில், தனது பேச்சு தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து மணிப்பூர் விவகாரம் பற்றிப் பேசத் தொடங்கினார் பிரதமர் மோடி.
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் ஒரு உத்தரவுதான் மிகப்பெரிய வன்முறையைத் தூண்டியுள்ளது. மணிப்பூரில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டார். மணிப்பூர் வன்முறை தொடர்பாக நேற்று விரிவான விவரங்களை அமித்ஷா கொடுத்துவிட்டார். மணிப்பூரில் முழுமையாக அமைதி திரும்பும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் உரையாற்றுகையில், மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது என்றாலும், அதன் மீதான அரசியல் அதைவிட வெட்கக்கேடானது. வடகிழக்கு மாநிலத்தில் நிலவும் பதற்றத்திற்கு மணிப்பூர் உயர் நீதிமன்ற உத்தரவு தான் காரணம். ஏப்ரல் மாதத்தில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது என அமித் ஷா குற்றம்சாட்டினார்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி பழங்குடி இனத்தவர் இடையே ஏற்பட்ட கலவரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையில் பழங்குடியினரின் வீடுகள், வாகனங்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கணக்கான மக்கள் அகதிகளாகி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மைத்தேயி என்ற பெரும்பான்மை மக்கள் சமூகத்தை பழங்குடிகள் என அங்கீகரிப்பதற்கான முயற்சியை அம்மாநில பாஜக அரசு முன்னெடுத்தது. மைத்தேயி வகுப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம், மைத்தேயி வகுப்பைச் சேர்ந்தவர்கள் பழங்குடி மக்கள் என்று மத்திய அரசுக்கு மணிப்பூர் மாநில அரசு நான்கு வாரங்களுக்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிராக நடந்த ஊர்வலம் கலவரமாக உருவெடுத்து பின்னர் பெரும் உயிர்ச் சேதங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த வன்முறை 3 மாதங்களைக் கடந்து நீடித்து வருவது நாட்டையே அதிர்வலைகளுக்கு உள்ளாக்கியுள்ளது. இப்போது இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் வரை சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications