நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்றாலும் பிரதமர் மோடி பேசணும்.. அவ்ளோதான்- சிபிஐ பினோய் விஸ்வம்
டெல்லி: லோக்சபாவில் மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது என்பது மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேசவைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே; இத்தீர்மானம் வெற்றி பெறுமா? தோற்குமா? என்பது எல்லாம் எங்களுக்கும் தெரியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோஸ் விஸ்வம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை. இதனை பிரதமர் மோடி ஏற்க மறுத்த நிலையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது காங்கிரஸ்.

இத்தீர்மானம் தொடர்பாக சி.பி.ஐ. கட்சி எம்பி பினோஸ் விஸ்வம் கூறியதாவது: மத்திய பாஜக அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு அரசியல் நடவடிக்கை. இத்தகைய அரசியல் நடவடிக்கைகள்தான் முடிவுகளைத் தரும். இப்படியான ஒரு நடவடிக்கைதான் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவைத்து பேச செய்யும். எங்களுக்கு மணிப்பூர் தொடர்பான விவாதம் தேவை. தீர்மானத்துக்கு கிடைக்கும் வாக்குகளை மறந்து விடுங்கள், அவர்களுக்கும் ஆதரவு எப்படி என்பது தெரியும், எங்களுக்கும் ஆதரவு எப்படி என்பது தெரியும்.
காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: இந்தியா கூட்டணி வலிமையாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது, மோடியின் ஆணவத்தை தகர்க்கவே நாங்கள் விரும்பினோம். பிரதமர் மோடி அகங்காரத்துடன் நடந்து கொள்கிறார். அவரை நாடாளுமன்றத்துக்கு வரவைப்பதற்கு எங்களிடம் இருக்கும் கடைசி ஆயுதம் இதுதான்.
உத்தவ் தாக்கரே சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது: மணிப்பூர் வன்முறைகளுக்கான பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர். பிரதமர் ஏன் நாடாளுமன்றத்துக்கு வர மறுக்கிறார்? பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வராததை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு இந்த தீர்மானம் வரவழைக்கும்.
எதிர்க்கட்சிகளின் இந்த தீர்மானம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: பிரதமர் மோடி, மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.












Click it and Unblock the Notifications