நீங்க டெல்லியில் மணீஷ் சிசோடியாவை தொட்டீங்க.. குஜராத்தில் கெட்டீங்க.. கெஜ்ரிவால் அதிரடி
டெல்லி: மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டால், குஜராத் தேர்தலில் வெற்றிபெற்று ஆம் ஆத்மி ஆட்சியமைப்பது உறுதி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 62 இடங்களில் வெற்றி பெற்று தனித்து பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது . இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபிக்க உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வென்றார் கெஜ்ரிவால்.. டெல்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.. ஆட்சி தப்பியது
நம்பிக்கை வாக்கெடுப்பு
இதனைத்தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றிபெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 62 எம்எல்ஏ-க்களில் 58 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். பாஜக எம்எல்ஏ-க்கள் அவையில் இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பில் யாரும் எதிராக வாக்களிக்கவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
இதனிடையே டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது போலி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் மற்றும் வங்கி லாக்கர் ஆகியவற்றில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மணீஷ் சிசோடியா
இதனால் வழக்கு தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் அழுத்தத்தில் உள்ளனர். இதனால் அழுத்தம் காரணமாக மணீஷ் சிசோடியாவை கைது செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பிரதமர் மோடியிடம் இருந்து நற்பெயர் சான்றிதழ் பெறுவதை நாடு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், அரசியல் வாழ்க்கையில் கைதுகள் என்பது ஒரு அங்கம். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 49 எம்எல்ஏ-க்கள் மீது இதுவரை 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கல்வித்தரம்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி உருவாக்கிய பள்ளிகளை பார்த்து, பாஜகவின் ஏன் இத்தனை பள்ளிகள், ஏன் இத்தனை கழிவறைகள், ஏன் இத்தனை வகுப்பறைகள் என்று தொலைக்காட்சி விவாதங்களில் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இதில் எந்த தவறும் இல்லை. உங்களின் குழந்தைகளை படிப்பதற்காக வெளிநாடு அனுப்புகிறீர்கள். ஆனால் நான் இந்த நாட்டின் ஏழைக் குழந்தைகளுக்காக உயர் தர கல்வியை உறுதி செய்வேன் என்று தெரிவித்தனர்.
பாஜக முயற்சி தோல்வி
தொடர்ந்து பேசுகையில், பாஜகவினரால் எல்லாவற்றையும் விலைக்கு வாங்க முடியாது என்பதை நிரூபிக்கவே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு காரணம். ஒவ்வொரு மாநிலத்திலும் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குகிறார்கள். மகாராஷ்டிராவில் வெற்றிகரமாக எம்எல்ஏ-க்களை வாங்கிய பாஜக, அடுத்ததாக ஜார்க்கண்டில் முயற்சித்து வருகிறது. ஆம் ஆத்மியைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-க்களை ரூ.800 கோடி கொடுத்து விலைக்கு வாங்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை வாங்க முடியவில்லை.
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி
மணீஷ் சிசோடியா வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனையால் குஜராத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சதவிகிதம் மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. அடுத்ததாக மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டால், ஆதரவு 6 சதவிகிதமாக அதிகரிக்கும். அதேபோல் மீண்டும் கைது செய்யப்பட்டால், குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.