குவைத் அரசு வானொலியில் 'இந்தி மொழியில் 30 நிமிட நிகழ்ச்சிகள்' பிரதமர் மோடி செம்ம மகிழ்ச்சி!
டெல்லி: குவைத் அரசு வானொலியில் இந்தி மொழியில் 30 நிமிடங்கள் வாரந்தோறும் நிகழ்ச்சி நடத்துவதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். குவைத் அரசின் அருமையான முன்னெடுப்பிற்காக, நான் குவைத் அரசுக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றும் பிரதமர் மோடி தமது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது:
எனக்குப் பிரியமான நண்பர்களே, உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவு எது என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் கண்டிப்பாக அம்மா என்றே கூறுவீர்கள். நம்மனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிகவும் உயர்வானதாகவே இருக்கும். அம்மா அனைத்து துக்கங்களையும் சகித்துக் கொண்டு, தனது மக்களை நன்கு வளர்க்கிறாள். ஒவ்வொரு அன்னையும் தனது குழந்தைகளின் மீது அன்பைச் சொரிகிறாள். நம் ஒவ்வொருவரையும் பெற்ற அன்னையின் அன்பு, நம் அனைவரின் மீதும், நாம் என்றுமே திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடனைப் போன்றது. நாம் நமது அன்னையர்க்கு ஏதாவது திரும்பச் செலுத்த முடியுமா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன் ஆனால், ஏதாவது செய்ய முடியுமா சொல்லுங்கள்? இந்த எண்ணத்தால் உந்தப்பட்டுத் தான் நான் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று ஒரு சிறப்பான இயக்கத்தை ஆரம்பித்தேன், இந்த இயக்கத்தின் பெயர் – ஒரு மரம் அன்னையின் பெயரில். நானும் கூட என் அன்னையின் பெயரிலே ஒரு மரத்தை நட்டிருக்கிறேன். நமது அன்னையரோடு இணைந்து அல்லது அவர்களின் பெயரில் ஒரு மரத்தைக் கண்டிப்பாக நடுங்கள் என்று நாட்டு மக்கள் அனைவரிடத்திலும், உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் நான் வேண்டுகோள் விடுத்தேன். அன்னையின் நினைவாக, அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த மரம் நடும் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதைக் காணும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்கள் தங்கள் அன்னையோடு இணைந்தோ, அவர்களின் புகைப்படத்தின் முன்பாகவோ மரம் நடும் படங்களை சமூக வலைத்தளங்களில் தரவேற்றி வருகிறார்கள். அனைவரும் தங்கள் அன்னைக்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள் – அவர்கள் ஏழைகளாகட்டும் செல்வந்தர்களாகட்டும், வேலைக்குச் செல்லும் பெண்களாகட்டும் இல்லத்தரசிகளாகட்டும். இந்த இயக்கமானது தங்கள் அன்னையரின்பால் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் சமமான சந்தர்ப்பத்தை அனைவருக்கும் அளிக்கிறது.

குவைத் வானொலியில் இந்தி நிகழ்ச்சி: நாம் குவைத் பற்றிப் பேசுகிறோம், ஆனால் ஹிந்தி எங்கிருந்து வந்தது என்று தானே நீங்கள் சிந்திக்கிறீர்கள்? ஆனால் குவைத் அரசாங்கம் தனது தேசிய வானொலியில் ஒரு விசேஷமான நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறது. அதுவும் ஹிந்தி மொழியில். குவைத் வானொலியில், ஞாயிறுதோறும் இது அரை மணி நேரம் ஒலிபரப்பாகும். இதிலே பாரதக் கலாச்சாரத்தின் பல்வேறு வண்ணங்கள் இடம் பெறும். நமது திரைப்படங்கள் மற்றும் கலையுலகோடு தொடர்புடைய விவாதங்கள் ஆகியன அங்கே இருக்கும் பாரதநாட்டவர்களுக்கு இடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. குவைத் நாட்டவர்களும் கூட இதிலே அதிக நாட்டம் காட்டுகிறார்களாம். இந்த அருமையான முன்னெடுப்பிற்காக, நான் குவைத் அரசுக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.












Click it and Unblock the Notifications