வடமாநிலங்களில் திடீர் நிலநடுக்கம்.. டெல்லியில் என்ன நடந்தது? பீதியில் மக்கள் உறைய காரணம் என்ன? பின்னணி
டெல்லி: டெல்லியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்த நிலையில் பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்து பீதியில் உறைந்தனர். மேலும் டெல்லியை போல் பல வடமாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் நேற்று என்ன நடந்தது? நிலநடுக்கத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
தெற்கு ஆசியாவின் பல நாடுகளில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, சீனா உள்பட 10க்கும் அதிகமான நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் அதிகபட்சமாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் தான் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைப்பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 என்ற அளவில் பதிவானது.

இந்தியாவிலும் நிலநடுக்கம்
இதுதவிர துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா,, கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவை பொறுத்தமட்டில் நேற்று இரவு தலைநகர் டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இரவு 10 மணி முதல் நிலநடுக்கம் என்பது உணரப்பட்டுள்ளது. சில இடங்களில் 3 வினாடிகளும், சில இடங்களில் அதற்கு கூடுதலாகவும் நிலநடுக்கம் நீடித்துள்ளது.

மக்கள் அலறியடித்து ஓட்டம்
இந்த நிலநடுக்கத்தால் கட்டங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். இதனால் அவர்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். மேலும் டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நன்கு உணர முடிந்தது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் விரிசல்?
குறிப்பாக டெல்லியில் மக்கள் அதிகளவில் பீதியடைந்தனர். அதாவது டெல்லியின் ஷாகர்பூரில் உள்ள கட்டடத்தில் விரிசல் விழுந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு ஏற்கனவே விரிசல் இருந்ததும். நிலநடுக்கத்தால் விரிசல் ஏற்படவில்லை. அந்த கட்டடம் பாதுகாப்பாக தான் இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் சொல்வது என்ன?
இதுபற்றி டெல்லி கான்மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் நேகா என்பவர் கூறுகையில், ‛‛வீட்டில் நான் தூங்கி கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று நிலநடுக்கத்தை உணர்ந்தேன். இதையடுத்து தாய் மற்றும் செல்லப்பிராணியான நாயை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தேன். நிலநடுக்கம் நீண்டநேரமாக உணரப்பட்டது'' என்றார். இதுபற்றி டெல்லி லாஜ்பத் நகரில் வசிக்கும் ஜோதி என்பவர் கூறுகையில், ‛‛வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தேன்.அப்போது டிவி மற்றும் சோபா திடீரென அசைந்தன. இதுபற்றி கணவரிடம் கூறினேன். அவர் கண்டுக்கொள்ளாத நிலையில் அவரே உணர்ந்தார். இதையடுத்து பதற்றத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தோம்'' என்றார். இதுபற்றி டெல்லியின் மத்திய பகுதியான கொனாட் அருகே இருக்கும் சொந்தமாக கார் வைத்து வாடகை்கு ஓட்டி வரும் ரமேஷ் பவார் கூறுகையில், ‛‛நான் பயணிகளை ஏற்ற காத்திருந்தேன். திடீரென்று என் கார் தனியாக அசைந்தது. இதையடுத்து கூச்சலிட்டேன். பதற்றம் ஏற்பட்டது'' என்றார்.

நிலநடுக்கத்துக்கான காரணம் என்ன?
டெல்லியை பொறுத்தமட்டில் நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் எவ்வளவு பதிவானது என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் டெல்லி உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான காரணமாக ஆப்கானிஸ்தான் இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் நிலைக்கொண்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.5 என்ற அளவில் பதிவான நிலையில் அதன் தாக்கம் தான் இந்தியா உள்பட பல நாடுகளில் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications