டெல்லியில் பயங்கர தீ விபத்து.. எலக்ட்ரானிக்ஸ் கடை ஊழியர்கள் 4 பேர் மூச்சுத்திணறி பலி!
டெல்லி: டெல்லியில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு டெல்லியில் உள்ள ராஜா கார்டன் பகுதியில், மகாஜன் எலெக்ட்ரானிக்ஸ் ஷோரூமில் திங்கட்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முதல் மாடியில் உள்ள கிடங்கில் தொடங்கிய தீ, பின்னர் நான்கு மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கும் பரவியது. கட்டிடம் முழுவதும் அடர்ந்த கரும் புகை பரவியது. அங்கு இருந்தவர்கள் வெளியே ஓடிவந்துள்ளனர்.
உயிரிழந்த நான்கு பேரும் கடைக்குள் சிக்கியிருந்தனர். கடுமையான மூச்சுத் திணறலால் அவர்கள் பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தீ விபத்தில் மூச்சுத் திணறி ஆயுஷி (22), பயல் (20), அமந்தீப் கவுர் (22), ரவி (28) ஆகியோர் இறந்தனர். நேரத்தில் சந்தீப் சர்மா (25) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐந்து தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட லோகேஷ் டகர் என்ற தீயணைப்பு வீரரும் காயமடைந்தார். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
"சுமார் 30 முதல் 35 பேர் மகாஜன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறோம். தீ விபத்து ஏற்பட்டபோது மதிய உணவு நேரம். அமன், பயல், ரவி மற்றும் ஆயுஷி ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட அதே மாடியில் இருந்தனர். அவர்கள் அங்கிருந்து தப்பிக்கும் முன்பே சிக்கிக்கொண்டனர்," என்று ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications