ஹத்ராஸ் போகும் வழியில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் மீது உ.பி. போலீஸ் போட்ட வழக்கு டிஸ்மிஸ்
டெல்லி: கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மற்றும் மூன்று நபர்களுக்கு எதிரான வழக்கை மதுரா நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஹர்தாஸ் மாவட்டத்தில் தலித் இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
அப்போது அந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ஹத்ராஸுக்கு சித்திக் கப்பன், அட்டிகுர் ரஹ்மான், மசூத் அகமது உள்ளிட்ட சில பத்திரிக்கையாளர்கள் சென்றனர். ஆனால் வழியிலேயே காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தது. பொது அமைதியை குலைப்பதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
சட்டவிரோத செயல் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு, தேசவிரோதச் செயல் ஆகிய குற்றச்சாட்டுகளும் பிறகு சித்திக் மீது சுமத்தப்பட்டன. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி மதுராவிற்கு சித்திக்கை, காவல்துறையினர் அழைத்து சென்றனர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் UAPA கீழ் சித்திகை சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மதுரா நீதிமன்றம் இன்று, சித்திக் கப்பன் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.
சிஆர்பிசியின் பிரிவு 116 (6) ன் படி நிர்ணயிக்கப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் காவல்துறை அவர்களுக்கு எதிரான விசாரணையை முடிக்க தவறியதால், கைதானவர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்வதாக மாஜிஸ்திரேட் ராம் தத் ராம் தீர்ப்பளித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைக் கோட் (சிஆர்பிசி) பிரிவுகள் 151 (அறியக்கூடிய குற்றங்களை தடுக்க கைது செய்தல்), 107 (பிற நிகழ்வுகளில் அமைதியைக் காப்பதற்கான பாதுகாப்பு) மற்றும் 116 (தகவல்களின் உண்மை குறித்து விசாரித்தல்) ஆகியவற்றின் கீழான வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.