மதுரா மசூதியில் கள ஆய்வு செய்ய அனுமதித்த அலகாபாத் ஹைகோர்ட் உத்தரவு- உச்சநீதிமன்றம் அதிரடி தடை!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் மதுரா ஷாயி ஈத்கா மசூதியில் கள ஆய்வு செய்ய ஆணையரை நியமிக்கலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தடை விதித்தது.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டதே ராமர் பிறந்த இடத்தில்தான் என சர்ச்சை வெடித்தது. இதனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாடு முழுவதும் பெரும் மதவன்முறையும் ரத்த ஆறும் ஓடியது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி தந்தது உச்சநீதிமன்றம். அயோத்தியில் வேறு இடத்தில் மசூதி கட்டவும் அனுமதித்தது உச்சநீதிமன்றம்.

குஜராத்தும் கிருஷ்ணரும்: அயோத்தியை தொடர்ந்து கிருஷ்ணர் பிறந்த இடமாக சொல்லப்படும் மதுராவையும் சர்ச்சை மையம் கொண்டது. கிருஷ்ணரை குஜராத் மாநிலத்தின் துவாரகையில் தங்களது அரசராக இன்றும் வாழும் மன்னராக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கிருஷ்ணர் அரசாண்டதாக சொல்லப்படுகிற பெட் துவாரகை கடலில் மூழ்கி இருந்த நிலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது.
கிருஷ்ண ஜென்ம பூமி கோவில்: அதே நேரத்தில் உ.பி. மதுராவில்தான் கிருஷ்ணர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கிருஷ்ணரின் ஜென்ம பூமியான இங்கு ஒரு கோவில் இருந்தது; அந்த கோவிலை முகலாய மன்னர் அவுரங்கசீப் இடித்து தரை மட்டமாக்கினார். அந்த இடத்தில்தான் தற்போதும் இருக்கும் ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டது என்பதுதான் சர்ச்சை. இந்த சர்ச்சையின் ஒரு பகுதியான மசூதி அருகே முஸ்லிம்களுடனான அனுமதியுடன் கிருஷ்ண ஜென்ம பூமி கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஷாயி ஈத்கா மசூதி நில மீட்பு: ஆனால் ஷாயி ஈத்கா மசூதி நிலம் முழுவதும் மீட்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருந்து வருகிறது. அயோத்தி ராமர் கோவில் தீர்ப்புக்குப் பின் இந்த கோரிக்கை வலுவடைந்தது. பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் ஷாயி ஈத்கா மசூதிக்குள் கள ஆய்வு நடத்த ஆணையர் ஒருவரை நியமிக்கவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
உச்சநீதிமன்றம் தடை: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஷாயி ஈத்கா மசூதிக்குள் கள ஆய்வுக்கான ஆணையரை நியமிக்கும் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அதிரடியாக இன்று தடை விதித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. ஏற்கனவே இதேபோல உ.பி வாரணாசி ஞானவாபி மசூதியை மையமாக வைத்தும் சர்ச்சையும் ஆய்வுகளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications