அரசியலுக்காக கட்டிய மனைவியையே உதறிய இவர் எப்படி மற்ற பெண்களை மதிப்பார்.. மோடி மீது மாயாவதி தாக்கு
டெல்லி: அரசியலுக்காக மனைவியையே உதறியவர் பிரதமர் நரேந்திர மோடி என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.
குஷி நகரில் 7-ஆம் கட்ட தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பேசுகையில் மாயாவதி அவர்களே! நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் உங்களுக்கு தெரியும்.
அப்படியிருக்கும் போது ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு அளித்துள்ள ஆதரவை நீங்கள் ஏன் இன்னும் வாபஸ் பெறாமல் உள்ளீர்கள். வெற்று அறிவிப்புகள் மூலம் மட்டுமே முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள் என மோடி தெரிவித்தார்.
நல்லக்கண்ணு, கக்கன் குடும்பத்தினர் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? பரபர தகவல்கள்!
மாயாவதி பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாயாவதி கூறுகையில் ஆல்வார் கூட்டு பலாத்காரம் தொடர்பாக நரேந்திர மோடிதான் அமைதி காக்கிறார். இந்த தேர்தலில் பலனடைய வேண்டும் என்பதற்காக மோடி நாராசமான அரசியலை செய்ய அவர் முயற்சிக்கிறார்.
சந்தித்தால் அச்சம்
இது முற்றிலும் அசிங்கமானது. அரசியலுக்காக கட்டிய மனைவியையே உதறிவிட்டு வந்தவர், எப்படி மற்ற பெண்களை மதிப்பார்?. பாஜகவில் உள்ள பெண் எம்பிக்கள் தனது கணவரை மோடி சந்தித்தாலே அச்சம் கொள்கின்றனர்.
போலி அன்பை
அவர் அவரது மனைவியை பிரிந்த மாதிரி தங்களின் கணவன்மார்களும் பிரிந்துவிட்டால் என்ன செய்வது என அச்சத்தில் உள்ளனர். தலித்களின் வாக்குகளை அள்ளுவதற்காக தலித்துகளின் பேரணிகளின்போது அவர்கள் மீது மோடி போலியான அன்பை காட்டுகிறார்.
மறக்க மாட்டார்கள்
ஷாப்பீர்பூர் மற்றும் சஹாரன்பூர் ஆகிய சம்பவங்களை தலித்துகள் மறக்க மாட்டார்கள். அது போல் ரோஹித் வேமுலா மற்றும் உனா சம்பவங்களையும் அவர்கள் மறக்க மாட்டார்கள் என்றார் மாயாவதி.