பாஜகவில் வெடிக்கும் கலகக் குரல்- மத்திய அரசுக்கு எதிராக மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் போர்க்கொடி!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) இதுவரை இல்லாத அளவுக்கு கலகக் குரல்கள் வெடித்து வருகின்றன. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மேகலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு எதிராக 23 அதிருப்தி தலைவர்கள் கடிதம் எழுதினர். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் 2 ஆண்டுகாலமாக நியமிக்கப்படாததுதான் இத்தனை பஞ்சாயத்துகளுக்கும் காரணம் என்றனர் அந்த மூத்த தலைவர்கள்.
காங்கிரஸைப் போலவே பாஜகவிலும் தற்போது கலகக் குரல்கள் அதிகரித்து உள்ளன. குறிப்பாக விவசாய சட்டங்கள், டெல்லி விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைகள் பாஜகவுக்கு கட்சிக்குள் இடியாப்ப சிக்கலை கொடுத்து வருகிறது.
கிராமவாசி கைது வழக்கு.. ராமநத்தம் ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம்
மத்திய பாஜக அரசின் 3 விவசாய சட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறார் அக்கட்சியின் எம்.பி. வருண் காந்தி. லக்கிம்பூரில் விவசாயிகள் ஜீப் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார் வருண் காந்தி. இந்த படுகொலை சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்றும் கண்டனக் குரல் எழுப்பி இருந்தார்.
மேனகா, சு.சுவாமி
இதேபோல் வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தியும் பாஜக தலைமையுடன் இணக்கமாக இல்லாத போக்கையே வெளிப்படுத்தி வருகிறார். மேலும் பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி இடைவிடாமல் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார். அண்மையில் மத்திய அரசின் பாதுகாப்பு கொள்கை, பொருளாதார கொள்கை ஆகியவற்றை மிக கடுமையாக விமர்சித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
காங். குரலாக சு.சுவாமி
சுப்பிரமணியன் சுவாமியைப் பொறுத்தவரை நீண்டகாலமாக மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஆனால் பாஜக தலைவர்களோ சுப்பிரமணியன் சுவாமியை ஒரு பொருட்டாகவே மதிக்கவே இல்லை. இதனால் தம் மீது அனைவரது கவனமும் திரும்ப வேண்டும் என்பதற்காக அவ்வப்போது காங்கிரஸ் கட்சியின் குரலில் சுப்பிரமணியன் சுவாமி பேசுவதும் வாடிக்கை. இதனையடுத்து அண்மையில் வருண் காந்தி, மேனகா காந்தி, சுப்பிரமணியன் சுவாமி மூவரும் பாஜக செயற்குழுவில் இருந்து கழற்றிவிடப்பட்டிருந்தனர்.
மேகாலயா ஆளுநர்
தற்போது மேகலாயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மத்திய அரசுக்கு எதிராக வெளிப்படையாக கருத்துகளை கூறி வருகிறார். மாநில ஆளுநர் ஒருவர் மத்திய அரசை இவ்வளவு கடுமையாக கண்டிப்பதும் அரசியல் பேசுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த சத்யபால் மாலிக், இந்த வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சண்டையிட்டும் பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. டெல்லியில் போராடும் விவசாயிகளின் குரலை காதுகொடுத்து மத்திய பாஜக அரசு கேட்காமல் போனால், அக்கட்சியால் தேர்தலில் வெல்லவே முடியாது எனவும் சாபமிட்டிருக்கிறார் சத்யபால் மாலிக்.
மத்திய அமைச்சர் ராஜினாமா செய்யனும்
மேலும் லக்கிம்பூரில் விவசாயிகளை ஜீப் ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தை கடுமையாக கண்டித்திருக்கிறார் சத்யபால் மாலிக். அத்துடன் இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலக வேண்டும். அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்றும் கூறியிருக்கிறார். மேகலாயா ஆளுநர் சத்யபால் மாலிக்கின் இந்த பகிரங்க விமர்சங்களால் பாஜக மேலிடம் அதிர்ச்சியடைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.