நீட்: விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் மனு-மோடி பயணத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமோ?
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அலுவலகத்தில் தமிழகத்தின் அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு இன்று மனு கொடுத்தது. இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தமிழகத்தின் அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு நாளை பிற்பகல் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மனுவை அளிக்க இருக்கிறது.
நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு பாழாகிறது என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள் நீட் தேர்வு பாதிப்பால் மாண்டு போயிருக்கின்றனர்.
இந்த நிலைமை தொடரக் கூடாது என்பதால் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகம் வலியுறுத்தி வருகிறது. மேலும் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவையும் தமிழக அரசு அமைத்தது. இக்குழுவும் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தது. இந்த அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட்டது.

போராடி வரும் தமிழகம்
பின்னர் சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலும் தமிழக எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்களை நடத்தினர்.

டெல்லியில் எம்.பிக்கள் மனு
இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மனு அளித்தனர். டெல்லியில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். அதனால் ஜனாதிபதி மாளிகை அலுவலகத்தில் இந்த மனு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் தமிழக எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மனு அளிக்க இருக்கிறது.

மோடி வருகையின் போது அறிவிப்பா?
தமிழக அனைத்து கட்சி எம்.பிக்களின் இந்த திடீர் நடவடிக்கை தொடர்பாக டெல்லி மூத்த பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு நாம் பேசினோம். அப்போது, தமிழகத்தில் காலூன்ற பாஜக இப்போது திராவிட கட்சிகளின் சாயலை பின்பற்ற தொடங்கி இருக்கிறது. இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தது ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தினார். இதேபோல் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு சாதகமான முடிவை எடுக்க அதிகம் வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கான சமிக்ஞையை பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது பார்க்கலாம் என அவர்கள் கோடிட்டுக் காட்டினர்.

இறங்கிப் பார்க்கும் பாஜக
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்றது. டெல்லியில் விவசாயிகள், இந்த 3 சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேல் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு ஓராண்டாக பாராமுகமாக இருந்த நிலையில் திடீரென பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்து நடைமுறைப்படுத்தினார். என்னதான் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவு இது என கூறப்பட்டாலும் பாஜக எந்த ஒரு பிரச்சனையிலும் பிடிவாதமாக இருக்காது என்பதை வெளிப்படுத்தியிருந்தது இந்த முடிவு. அதேபோல் நீட் தேர்வு விவகாரத்திலும் அதிரடியான நிலைப்பாட்டை மத்திய அரசு அல்லது பிரதமர் மோடி அறிவிக்கலாம்; அதற்கான முன்னோட்டங்களே டெல்லியில் தமிழக அனைத்து கட்சி எம்.பிக்களின் இந்த முயற்சிகள் என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications