இந்த மாநிலங்கள நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு... மத்திய அரசின் எச்சரிக்கை பட்டியலில் புதுச்சேரி
டெல்லி: கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்தாண்டு ஜனவரி 30ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகரித்த கொரோனா பரவல், செப்டம்பர் மாதம் உச்சத்தைத் தொட்டது. பின்னர், அக்டோபர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைய தொடங்கியது.
இருப்பினும், சில மாநிலங்களில் கொரோனா பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம்
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷன், "இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலை நன்றாகவே உள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் அதிகமாகவே உள்ளது.

அதிகம்
அதாவது எட்டு மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் அதிகமாக உள்ளது. தேசிய சராசரியைவிட இந்த எட்டு மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். அம்மாநில சுகாதார அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பிலேயே உள்ளது" என்றார்.

எந்த மாநிலங்கள்
ஒரு வாரத்தில் மொத்தமாக எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது, அவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது என்பதிலிருந்து கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் கணக்கிடப்படுகிறது. இந்தியாவின் சராசரி கொரோனா பாசிட்டிவ் ரேட் தற்போது 1.82%ஆக உள்ளது. ஆனால், கேரளா(11.2%), சத்தீஸ்கர்(6.2%), மகாராஷ்டிரா(4.7%), கோவா(4.4%), நாகாலாந்து(3.6%), லடாக்(2.9%), புதுச்சேரி(2.6%), சண்டிகர்(2.1%) ஆகிய மாநிலங்களில் பாசிட்டிவிட்டி ரேட் அதிகமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்தப் பட்டியலில் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் வைரஸ் பரவல் உச்சம் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது 1.55 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 69 ஆயிரம் பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 38 ஆயிரம் பேர் மாகாரஷ்டிராவை சேர்ந்தவர்கள்.

உயிரிழப்பு அதிகரிக்கலாம்
இது குறித்து சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுள்ளது. சில இடங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா அலையும் ஏற்பட்டுள்ளது. அப்படி கொரோனா பாதிப்பு திடீரென்று அதிகரிக்கும் மாநிலங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படலாம், அப்போது உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்" என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications