ஆண்டுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு.. திருநங்கைகளுக்கு சுகாதார திட்டம்! அறிமுகம் செய்த மத்திய அரசு
டெல்லி: திருநங்கைகளுக்கு சுகாதாரத் திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கையெழுத்தானது.
இந்தியாவில் திருநங்கைகள் தொடர்பான விவகாரங்களுக்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருநங்கைகளை சமூகத்தின் முக்கிய அங்கமாக கொண்டு வருவதற்காக மத்திய அமைச்சகம் சார்பாக திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, திருநங்கைகளின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அதேபோல் இந்த சட்டம், திருநங்கைகளுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கு வழிவகை செய்தது.
இந்த நிலையில் திருநங்கைகளுக்கு சுகாதாரத் திட்டம் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் கையெழுத்தானது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், தேசிய சுகாதார ஆணையமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்தின் இந்த முயற்சி முதல்முறையாகும். இது இந்திய சமூகத்திற்கு ஒரு புதிய திசையை வழங்குவது மட்டுமல்லாமல், திருநங்கைகளுக்கு சரியான மற்றும் மரியாதைக்குரிய இடத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு, பயனாளி ஒரு திருநங்கையாக இருக்க வேண்டும், அதேபோல் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட திருநங்கைகள் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில திட்டங்களிலிருந்து இத்தகைய பலன்களைப் பெறாத அனைத்து திருநங்கைகளுக்கும் இந்தத் திட்டம் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திருநங்கைகளுக்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் SMILE என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு திருநங்கைக்கும் மருத்துவக் காப்பீடு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலம் நிதியளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications