ராதாபுரம் தபால் வாக்குகள் விவகாரம்.. ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து இன்பதுரை முறையீடு!
Recommended Video
டெல்லி: ராதாபுரம் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார் இன்பதுரை.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இன்பதுரை 69,596 வாக்குகளும் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது தபால் வாக்குகளில் 203 வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்தது தெரியவந்தது. அந்த வாக்குகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அப்பாவு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தல் வழக்கை நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்தார். இந்த நிலையில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண நேற்று முன் தினம் ஹைகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இதை எதிர்த்து அதிமுக ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரினார். ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.












Click it and Unblock the Notifications