பிரதமர் மோடி முடிவால் ரஃபேல் விமானத்தின் விலை 41% அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்
Recommended Video
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் முடிவால் ரஃபேல் போர் விமானங்கள் ஒவ்வொன்றின் விலையும் 41% அதிகரித்துள்ளது என்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'தி இந்து' ஆங்கில நாளிதழ், இதுதொடர்பாக நேற்று பிரத்யேக செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 126 ரஃபேல் விமானங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாரீஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, திடீரென முந்தைய அரசின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, 36 விமானங்களை மட்டும் வாங்க புதிய ஒப்பந்தம் போட்டார்.
ஆனால் இந்த ஒவ்வொரு விமானத்தின் விலையும், முந்தைய அரசு காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 41.42 சதவீதம் அதிகம்.
126 விமானங்கள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ரஃபேல் விமானம் தொடர்பாக டெண்டர் விடப்பட்டது. அதில் பங்கேற்று, மிக குறைந்த விலையை குறிப்பிட்டு, 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை டஸால்ட் நிறுவனம் பெற்றது. 18 விமானங்கள் பறக்க தயாராக இருக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்து ஆகும். எஞ்சிய 108 விமானங்கள் இந்தியாவிலுள்ள எச்.ஏ.எல் அரசு நிறுவனத்தில் தயாரிக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனையாகும்.
பறக்கும் நிலை
பறக்கும் நிலையில் உள்ள விமானத்திற்கு விலையாக 79.3 மில்லியன் யூரோ நிர்ணயிக்கப்பட்டது. 2011ல் விலை உயர்வை சுட்டிக்காட்டி, விமானத்தின் விலை ஒவ்வொன்றுக்கும் 100.85 மில்லியனாக அதிகரிக்கப்பட்டது. 2016ம் ஆண்டில் இந்தியா-பிரான்ஸ் அரசுகளுக்கு நடுவே போடப்பட்ட ஒப்பந்தத்தில், 2011ம் ஆண்டு நிர்ணயித்த விலையை விட 9 சதவீதம் விலை குறைக்கப்பட்டது. விமானம் ஒன்றுக்கு தலா 91.85 மில்லியன் யூரோ என்று விலை குறைக்கப்பட்டது.
41 சதவீதம் அதிகம்
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் இதுதான். ரஃபேல் போர் விமானத்தில், இந்தியாவிற்காக மட்டும், 13 வகை சிறப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களை சேர்க்க வேண்டும் என்று, இந்திய அரசு வலியுறுத்தியிருந்தது. இந்த 13 அம்சங்களுடன் 36 விமானங்களை வடிவமைக்க 130 கோடி யூரோ என்ற விலையை மோடி அரசு வழங்க ஒப்புக்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில், ரஃபேல் விமானத்தில் இந்தியாவுக்கான பிரத்யேக அம்சங்களுடன், 126 விமானங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மோடி அரசு காலத்தில் சற்று விலை குறைக்கப்பட்டபோதிலும், வெறும் 36 விமானங்களுக்குதான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்திய வித்தியாசத்தால், ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41% அதிகரித்துள்ளது.
சர்ச்சை
இப்படி விலை ஏறிப்போனதுதான் ரஃபேல் தொடர்பாக இப்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம். இந்தியா சார்பில் இந்த பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்துள்ளது 7 பேர். அதில், 3பேர் இந்த விலை நிர்ணயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் ஆதரவு அளித்தனர். எனவே, ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விலகிய மனோகர் பாரிக்கர்
2009ம் ஆண்டு 126 விமானங்களுக்கு 140 கோடி யூரோ நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2015 மே மாதம், 130 கோடி யூரோ நிர்ணயிக்கப்பட்டதால், இதுதான் சிறந்த ஒபந்தம் என பேச்சுவார்த்தை குழுவில் இருந்த 4 பேர் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் விதிமுறை அடிப்படையில், அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் குழு அமைக்கப்பட்டபோதிலும், மனோகர் பாரிக்கர் அந்த பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டு, பிரதமர் தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவை குழுவிற்கு பொறுப்பை மாற்றிவிட்டார். பிரதமர் மோடி முன் அறிவிப்பின்றி 2015ம் ஆண்டு 36 ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டுவிட்டதால், தனது பொறுப்பை துறந்து பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழுவிற்கு மனோகர் பாரிக்கர் அனுப்பிவிட்டதாக தெரிகிறது.
புதிய விலை
2007ம் ஆண்டு காங். தலைமையிலான அரசின் காலகட்டத்தில், 126 விமானங்களில் சிறப்பு அம்சங்கள், மேம்பாட்டுக்காக 140 கோடி யுரோ என்ற விலையை டசால்ட் நிறுவனம் நிர்ணயித்து. மோடி அரசில் 2016ம் ஆண்டு செய்யப்பட்டஒப்பந்தத்தில் 36 ரஃபேல் போர்விமானங்களில் இதே அம்சங்களுக்காக 130 கோடி யூரோ என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஒவ்வொரு விமானத்தின் விலையைக் காட்டிலும் 25 மில்லியன் யூரோ அதிகமாக இப்போதைய ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மிக அதிக விலை
காங். தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் 9% விலையைக் குறைத்துவிட்டதாக மோடி அரசு கூறிவந்தாலும் கூட, உண்மையில், 9% விலை குறைப்பை ஒப்பிட்டால், ஒவ்வொரு விமானத்தின் மீதான 25 மில்லியன் யூரோ விலை உயர்வு என்பது மிகவும் அதிகமாகும். 36 ரஃபேல் விமானங்களின் சிறப்பு அம்சங்களுக்காக 127.86 மில்லியன் யூரோ விலை வழங்க மோடி அரசு ஒப்புக்கொண்டுள்ளதால், 2007ம் ஆண்டு டசால்ட் நிறுவனம் கூறிய விலையைக் காட்டிலும் 41.42 சதவீதம் அதிகமாகும்.
விதிமீறல்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒப்பந்தப்படி 126 விமானங்களுக்கான விலையில்தான் அடுத்த கட்டமாக 63 விமானங்கள் வாங்கும்போதும் விலை இருக்க வேண்டும் என்ற ஷரத்து இருந்தது. இதனால் வருங்காலத்திலும் விமானத்தில் விலை உயராமல் இருக்க வாய்ப்பு இருந்தது.ஆனால், இந்த ஷரத்தை மோடி அரசு ரத்து செய்துவிட்டது. ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாகவே தெரிய வருகிறது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதையடுத்து, மோடி அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.
|
சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் வெளியிட்ட ட்வீட்டுகளில் இதுபற்றி விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: 126 ரஃபேல் விமானங்கள் தேவைப்படுவதாக விமானப்படை கோரிக்கைவிடுத்தபோதிலும், அரசு 36 விமானங்களை மட்டுமே வாங்க முடிவு செய்தது ஏன்? 'தி இந்து' வெளியிட்டுள்ள புதிய தகவல்களுக்கு பதிலளிக்க அவசர தேவையுள்ளது.
|
பாதுகாப்பில் சமரசம்
தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்ட இந்த அரசு, விமானப்படை கோரிய 126 விமானங்களை வழங்க மறுத்துள்ளது. இந்த விமானங்கள் மிகவும் அவசரமாக தேவைப்படுபவையாகும். இவ்வாறு சிதம்பரம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.