எனது நண்பருடன் ஆக்கப்பூர்வமாக உரையாடினேன்.. டிரம்புடன் பேசியது குறித்து மோடி
டெல்லி: எனது நண்பரும் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்புடன் இதயம் கனிந்த மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடலை மேற்கொண்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜி7 மாநாடு வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்த ஆண்டு அமெரிக்கா தலைமையேற்று நடத்துகிறது. இதனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஒரு சில நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க டிரம்பால் முடியும்.

அதன்படி அவர் இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களை அழைக்கவுள்ளார். அதன்படி நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது ஜி7 மாநாட்டுக்கு வருகை தருமாறு மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். இருவரது உரையாடல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எனது நண்பரும் அமெரிக்க அதிபருமான டிரம்புடன் இதயம் கனிந்த உரையாடலை நடத்தினேன்.
அது ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது. ஜி7 மாநாட்டுக்கு அமெரிக்கா தலைமையேற்பது, கோவிட் 19 தொற்றுநோய் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினோம். இந்தியா- அமெரிக்கா இடையே உள்ள ஆழமான மற்றும் வளமான நட்பு கொரோனாவுக்கு பின்னர் முக்கிய தூணாக இருக்கும் என்றார் மோடி












Click it and Unblock the Notifications